இது வெற்று புகழ்ச்சி அல்ல, இதற்கு ஆதாரமாக தரவுகளும் இருக்கின்றன. டிவி ஒளிபரப்புக்காக கிரிக்கெட் தரவுகளை சேகரித்து ஆய்வுசெய்யும் ‘Cricviz’ நிறுவனம் வெளியிட்ட தகவல் இது.
இந்தப் பந்தில் எல்லோரும் ஆடுவது போல் லெக் சைடில் புல் ஷாட் ஆடியிருக்கலாம். இல்லை சற்று நகர்ந்து ஆஃப் சைடில் பாயின்ட் திசையில் கட் செய்திருக்கலாம். இல்லை கொஞ்சம் பொறுமையாகப் பந்தை வரவிட்டு Third man-க்கு கட் செய்திருக்கலாம். இப்படி அந்த இடத்தில் வீசப்படும் பந்திற்கு அவ்வளவு ஷாட்கள் இருக்கின்றன. சராசரி பேட்டர் அதில் ஏதேனும் ஒன்றைத்தான் ஆடியிருப்பார். ஆனால், விராட் கோலி சராசரி பேட்டர் இல்லையே! சமகாலத்தின் மிகச்சிறந்த பேட்டர் தான்தான் என்பதை இன்னும் ஒருமுறை உலகுக்கு இந்த ஷாட் மூலம் சொல்லியிருக்கிறார் கோலி.
இன்னொன்றையும் மறந்துவிடக்கூடாது. இது ஒரு இந்தியா-பாகிஸ்தான் போட்டி, மைதானத்தில் 90,000 ரசிகர்கள்; வெளியில் கோடிக்கணக்கான ரசிகர்கள்… ஆனாலும் இப்படி ஒரு ஷாட் ஆடுவதில் எந்தத் தயக்கமோ அவநம்பிக்கையோ கோலியிடம் இல்லை. கோலி இந்த சிக்ஸர் அடிக்கும் போது மறுமுனையில் இருந்த ஹர்திக் பாண்டியா மட்டும் மெய்மறந்து போகவில்லை, போட்டியைப் பார்த்த அனைவருமே மெய் மறந்துபோயிருந்தனர். வெற்றியா, தோல்வியா என்ற பதற்றத்தில் இருக்கும் ரசிகனை மெய்மறக்கச்செய்வது சாதாரண விஷயமல்ல.