பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் அளவுக்கு இன்ஃப்ளுயென்ஸா மற்றும் டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் தீவிரமாகப் பரவவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்திருக்கிறார். சமீப நாள்களில் டெங்கு மற்றும் இன்ஃப்ளுயென்ஸா காய்ச்சல் பரவி வருகிற நிலையில் புதுச்சேரி மாநில அரசு, 5 நாள்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் குரல் கொடுத்து வரும் நிலையில் அதற்கான அவசியமில்லை என அமைச்சர் மா.சுப்ரமணியன் மறுத்திருக்கிறார். இது தொடர்பாக நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர்…
“தமிழ்நாட்டில் இந்த ஆண்டில் மொத்தம் 1166 பேர் ஃப்ளு காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இன்றைக்கு மட்டும் 371 பேர் இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல் டெங்கு பாதிப்பு 121 ஆக அதிகரித்திருக்கிறது. இச்சூழலில் காய்ச்சல் அதிவேகமாகப் பரவி வருகிறது என்பது போன்ற செய்திகள் வெளியாகி மக்களை அச்சத்துக்கு ஆளாக்கியிருக்கின்றன. இது காய்ச்சல் காலம் என்பதால், இது போன்று காய்ச்சல்களால் மக்கள் பாதிக்கப்படுவது மிகவும் இயல்பானது. சாதாரண நாள்களிலேயே ஒரு சதவிகிதம் பேர் காய்ச்சலுக்கு ஆளாகின்றனர். மழைக்காலத்தில் அந்த எண்ணிக்கை 1.5 ஆக உயர்ந்திருப்பது ஆண்டாண்டு காலமாக நடந்து வருகிறது. காய்ச்சல் காலத்தை எதிர்கொள்வதற்கான அத்தனை தயாரிப்புகளையும் மருத்துவத்துறை மேற்கொண்டிருக்கிறது. அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கான வார்டுகள், போதிய படுக்கை வசதிகள் உள்ளன. இது வைரஸ் காய்ச்சல் என்பதால் அதிகபட்சமாக 3 நாள்களில் குணமாகிவிடும் என்பதால் இதற்காக பதற்றம் கொள்ளத் தேவையில்லை.
இது இயல்பானதுதான் என்றாலும், பொதுமக்களின் நலன் கருதி நாளை ஒரு நாள் மட்டும் தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் காய்ச்சல் முகாம் நடத்தப்படவிருக்கிறது. காய்ச்சலின் அறிகுறிகளான சளி, இருமல் மற்றும் தலைவலி இருப்பவர்கள் இம்முகாமில் தேவையான பரிசோதனைகளை மேற்கொள்ளலாம். காய்ச்சல் இருப்பவர்கள் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். இதற்காக 476 நடமாடும் மருத்துவக்குழுக்கள் இயங்குகின்றன.