சென்னை: வேலை வாங்கி தருவதாக கூறி மியான்மாருக்கு கடத்தப்பட்ட தமிழக தொழிலாளர்களை மீட்க வேண்டும் என்று முத்தசரன் வலியுறுத்தியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தாய்லாந்தில் வேலை வாங்கி தருவதாக கூறி அழைத்துச் சென்றவர்கள், மியான்மார் நாட்டின் மியாவாடி நகருக்கு கொண்டு சென்று, கொத்தடிமைப் பணிக்கு நிர்பந்தித்து, சித்தரவதை செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தச் செய்தி மியாவாடியில் சிக்கியுள்ளவர்கள், தாய்லாந்தில் தவிக்கவிடப்பட்டவர்களின் குடும்பங்களில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு தருவோம் என உறுதியளித்த ஒன்றிய பாஜ அரசு, நடைமுறையில் ஏமாற்றி விட்டதால், தொழிலாளர்கள் அயல்நாடுகளில் அவதிப்படும் கொடுமை ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் மியான்மரில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களை மீட்டு, அவரவர் வீடுகளில் ஒப்படைத்து, அவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்க ஒன்றிய அரசும், அயலுறவுத் துறையும் போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.