சென்னை: பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதற்கு பாமக தலைவர் அன்புமணி வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நரிக்குறவர்கள் மற்றும் குருவிக்காரர்களை பழங்குடியினத்தில் சேர்ப்பதற்கான சட்ட முன்வரைவுக்கு கடந்த 2016ம் ஆண்டே ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. ஆனால், அப்போது அந்த சட்ட முன்வரைவு சட்டமாக்கப்படவில்லை. இப்போது ஒன்றிய அமைச்சரவையில் எடுக்கப்பட்டுள்ள முடிவுக்கு விரைவாக செயல்வடிவம் தர வேண்டும். தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் வாழும் மலைவேடர்கள், தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் அதிகமாக வாழும் குரும்பா, குரும்பர், திருவண்ணாமலை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையில் வாழும் கொண்டா ரெட்டிகள் உள்ளிட்ட மேலும் பல சாதிகளும் தங்களை பழங்குடியினத்தில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். அவர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானது. எனவே, அந்த கோரிக்கைகளையும் ஆராய்ந்து நிறைவேற்ற ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளார்.
பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர்கள் சேர்ப்பு: அன்புமணி வரவேற்பு
Share
