பற்களின் நண்பன்
`ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி’ என்ற பழமொழியை பலமுறை கேள்விப்பட்டிருப்போம். இதில் ஆலுக்கு சொந்தக்காரர்தான் இந்த ஆலமரம். ஆலமர விழுதுகளைக் கொண்டு பல் துலக்கும் பழக்கம் அனேகருக்கு உண்டு. மென்மையான ஆலமர விழுதுகளைக் கொண்டு பல் துலக்க, பற்களுக்கு மிகுந்த பலம் கிடைக்கும்.
கூடுதல் பலனாக நம் பல் ஈறுகளும் இறுக்கமைடையும். பற்களும் அவற்றைத் தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கும் ஈறுகளும் இரட்டிப்பு மகிழ்ச்சி அடையும்.
இதன் விழுதுகளைக் காயவைத்து, பொசுக்கி, பற்பொடியாகவும் உபயோகப்படுத்தலாம்.
ஆலம் பால்
பசும்பால் தெரியும்… ஆட்டுப்பால் தெரியும்… இதென்ன ஆலம்பால் என்கிறீர்களா? ஆலமரத்திலிருந்து நமக்கு கிடைக்கும் மருத்துவப்பால் இது! ஆலம்பால் உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கக்கூடியது. ஆலம்பாலைக் கொண்டு வாய்க் கொப்பளிக்க, `ஆடும் பல்லையும் இறுக்கும்’ என்று சித்த மருத்துவ பாடல் ஒன்று தெரிவிக்கின்றது.
ஈறுகளுக்கு வலிமையைக் கொடுத்து, பற்களை இறுக்கிப் பிடிக்க ஆலம்பால் பெருமளவில் உதவும். பிற மருந்துகளோடு சேர்ந்து, சருமநோய்கள் மற்றும் ரத்தக் குறைவு முதலிய தொந்தரவுகளை நிவர்த்தி செய்யவும் இந்த ஆலமரப் பால் மருந்தாகப் பயன்படுகிறது.
புண்களைப் போக்கும் ஆலமரப்பட்டை
ஆல மரப்பட்டையை ஒன்றிரண்டாகச் சிதைத்து, குடிநீரிட்டுக் கொண்டு வாய்க் கொப்பளிக்க, வாயில் தோன்றும் புண்கள், நாவில் உண்டாகும் சிறு கொப்புளங்கள், ஈறிலிருந்து வடியும் ரத்தம் ஆகியவை குணமாகும். பேசும்போது வாயில் தோன்றும் நாற்றத்தையும் ஆலமரப் பட்டைக் குடிநீர் சரிசெய்யும்.
துவர்ப்புச்சுவை கொண்ட ஆலமரப்பட்டைகளில் புண்களை குணமாக்கும் பல்வேறு வேதிப்பொருள்கள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. துவர்ப்புச் சுவையுள்ள மூலிகைப் பொருள்கள், புண்களை குணமாக்கும் மருந்தாக சித்த மருத்துவத்தில் பயன்படுகின்றன. புண்களைக் கழுவும் `மருந்து நீராகவும்’ இந்த ஆலமரப் பட்டை குடிநீரைப் பயன்படுத்தலாம்.