மத்தியப் பிரதேசத்தின் மோவ் நகரில் மன்பூர் எனும் பழங்குடி இனத்தைச் சார்ந்தவர் அர்ஜுன் சிங்கரே (19). கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஒரு கொள்ளை சம்பவத்தின் கீழ் விசாரணை என்ற பெயரில் காவலர்கள் அவரை கைது செய்துள்ளனர்.
அடுத்த நாள் காவலர்களின் கொடூர தாக்குதலால் அர்ஜுனின் உடல்நிலை மோசமடையவே, அவர் அருகில் உள்ள சுகாதார மையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனையறிந்த அர்ஜுனனின் உறவினர்கள், சனிக்கிழமை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்குச் சென்று தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
19 வயது பழங்குடி இளைஞரைக் கொடூரமாகச் சித்ரவதை செய்து, லத்தியால் அடித்துத் துன்புறுத்தி, அது உடைந்த பின்பு, கோடாரியின் கைப்பிடியால் போலீஸார் அடித்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர், உதவி சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் இரண்டு காவலர்கள் உட்பட ஐந்து பேரை சஸ்பெண்ட் செய்துள்ளனர். இது குறித்து விசாரிக்கத் தனிக்குழு அமைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.