
பட மூலாதாரம், Getty Images
மின்கட்டண கணக்கீடு – கோப்புப்படம்
இன்று (25.08.2022) தமிழ்நாட்டில் வெளியாகும் நாளிதழ்கள், இணையதளங்களில் இன்று வெளியான செய்திகளில் சிலவற்ற இங்கே தொகுத்து வழங்குகிறோம்).
தமிழ்நாட்டில் மி கட்டணம் உயர்த்தப்படும் என்ற அறிவிப்புக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை, நிபந்தனையுடன் கூடிய தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளதாக தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி கோரி மின்வாரியம் சார்பில் ஒழுங்குமுறை ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஒழுங்குமுறை ஆணையம் விசாரணைக்கு ஏற்று, பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்தி வருகிறது.
ஆனால், தற்போது, “இந்த ஆணையத்தில், தலைவரும் ஒரு உறுப்பினரும் மட்டும் இருக்கும்போது, ஒழுங்குமுறை ஆணையம் கூடியது சட்டவிரோதம். எனவே, மின்வாரிய ஒழுங்கு முறை ஆணையத்தில் சட்டத்துறை சார்ந்த உறுப்பினரை நியமிக்கும் வரை கட்டண உயர்வு தொடர்பாக முடிவு எடுக்கவும், கருத்து கேட்பு கூட்டம் நடத்தவும் தடை விதிக்க வேண்டும்,” என்று கோரி தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கத் தலைமை ஆலோசகர் கே.வெங்கடாசலம் உள்ளிட்ட சிலர் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரர்கள் சார்பில் இந்த வழக்கில் ஆஜரான வழக்குரைஞர்கள், சட்டத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர் இல்லாமல் மின் கட்டண உயர்வு நடவடிக்கைகளை மேற்கொள்வது அரசியலமைப்பு சட்டத்திற்கும், உச்ச நீதிமன்ற உத்தரவுகளுக்கும் எதிரானது என தெரிவித்தனர். மின்வாரிய ஒழுங்கு முறை ஆணையத்தின் தொழில்நுட்ப உறுப்பினரை தேர்வு செய்து நியமித்த அதே நேரத்தில் சட்டத்துறை சார்ந்த உறுப்பினரையும் அந்த பதவியில் நியமித்து இருக்கலாம் என்று வாதிட்டுள்ளனர்.
ஆனால் அரசு தரப்பில், பல ஆண்டுகளாக மின் கட்டண உயர்வுக்கான நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது எடுத்துள்ள நடவடிக்கையை தாமதப்படுத்துவது ஆபத்தில் முடியும். எனவே இந்த மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஒரு ஆணையத்தில் சட்ட உறுப்பினர் இருப்பது கட்டாயம் என உச்ச நீதிமன்றம் தெரிவிக்கிறது. அப்படி இருக்கும்போது, அந்த பதவிக்குரிய நபரை நியமிக்காதது நியாயம் இல்லை. மேற்கண்ட 2 பதவிகளுக்கான நபர்களை ஒரே நேரத்தில் நியமிப்பதற்கு மாநில அரசுக்கு எந்த தடையும் இல்லை. ஆனால் அதை செய்யவில்லை என்று தெரிவித்தார் நீதிபதி.
உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களைப் புறக்கணிக்க முடியாது. எனவே, “தமிழ்நாடு மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்ட உறுப்பினர் நியமிக்கப்படும் வரை, மேற்கூறிய கட்டண உயர்வு அனுமதி கோரும் மனுக்கள் மீதான இறுதி உத்தரவை பிறப்பிக்க தடை விதிக்கிறேன். மின் கட்டண உயர்வு தொடர்பான தற்போதைய நடவடிக்கைகளை தொடரலாம். சட்ட உறுப்பினரை நியமித்த உடனேயே, இந்த தடை உத்தரவு காலாவதியாகி விடும்,” என்றும் அவர் தெரிவித்தார்..
மனுதாரர்கள் தங்களது கோரிக்கையை உரிய ஆணையத்தில் தெரிவிக்க ஒருவாரம் அவகாசம் அளிக்கப்படுகிறது. இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.
பொறியியல் சேர்க்கை பொதுப்பிரிவு பொறியியல் கலந்தாய்வு ஒத்திவைப்பு
அண்ணா பல்கலைக்கழகம்
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று (ஆகஸ்ட் 25) தொடங்கவிருந்த பொறியியல் படிப்புகளுக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாகவும், நீட் தேர்வு முடிவுகள் வெளியான அடுத்த 2 நாள்களில் இந்தக் கலந்தாய்வு நடைபெறும் என்றும் தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி அறிவித்துள்ளார் என தினமணி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.
இதுகுறித்து விழுப்புரத்தில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அமைச்சர் க.பொன்முடி மேலும் கூறியதாவது:
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை தொடங்கவிருந்த தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான பொதுக் கலந்தாய்வு, நீட் தேர்வு முடிவுகள் வெளியாகாததால் ஒத்திவைக்கப்படுகிறது. நீட் தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 21-ஆம் தேதிக்குள் வந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு இருந்ததால், தமிழ்நாட்டில் பொறியியல் பொதுக் கலந்தாய்வு வியாழக்கிழமை தொடங்கி நடைபெறும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
நீட் தேர்வு முடிவுகள் வராமல் பொதுக் கலந்தாய்வை நடத்தும்போது, மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுவார்கள். மருத்துவம், பொறியியல் படிப்புகள் என இரண்டு கலந்தாய்வுகளுக்கும் மாணவர்கள் கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் உருவாகும். மேலும், பொறியியல் கலந்தாய்வை முன்கூட்டியே நடத்தினால், மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்து மருத்துவப் படிப்பை தேர்வு செய்யும் போது, பொறியியல் படிப்புகளில் காலியிடங்கள் உருவாகும்.
இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டுதான், நீட் தேர்வு முடிவுகள் வெளியான அடுத்த 2 நாள்களில் பொறியியல் பொதுக் கலந்தாய்வு நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வர காலதாமதம் ஆனதால், முன்பு பொறியியல் கலந்தாய்வு தள்ளிப்போனது. இப்போது நீட் தேர்வு முடிவுகள் வெளியாக காலதாமதம் ஆவதால் தள்ளிப்போகிறது என்றார் அமைச்சர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகக் கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இணையதளம் வழியாக கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பித்த 1.5 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு 4 சுற்றுகளாக கலந்தாய்வை நடத்த தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 431 பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு (அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு, முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள்) கடந்த சனிக்கிழமை தொடங்கியது. இதையடுத்து, பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு வியாழக்கிழமை தொடங்கி வருகிற அக்டோபர் 21-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது அந்தக் கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக அமைச்சர் அறிவித்துள்ளார் என்று அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
சாவர்க்கர் ரத யாத்திரை – கர்நாடகாவில் பதற்றம்
பட மூலாதாரம், SAVARKARSMARAK.COM
சாவர்க்கர்
சுதந்திர தின வன்முறையை அடுத்து, தற்போது நடைபெறும் சாவர்க்கர் ரத யாத்திரையால் கர்நாடக மாநிலத்தில் காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக இந்து தமிழ் திசையில் செய்தி வெளியாகியுள்ளது.
கர்நாடகாவில், பாஜக சார்பில் ஆகஸ்ட் 23-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை 8 நாட்களுக்கு சாவர்க்கர் ரத யாத்திரை தொடங்கப்பட்டுள்ளது. இந்த ரத யாத்திரையை முன்னாள் முதல்வர் எடியூரப்பா மைசூருவில் காவிக்கொடி அசைத்து தொடங்கி வைத்தார். சாவர்க்கர் படத்தால் அலங்கரிங்கப்பட்ட வண்டி சாம்ராஜ்நகர், குடகு, மண்டியா, ராம்நகர் உள்ளிட்ட மாவட்டங்களின் வழியாக சென்றது.
முன்னதாக, கர்நாடகாவில் சுதந்தின தினத்தன்று பாஜக சார்பில் வைக்கப்பட்ட பேனர்களில் முன்னாள் பிரதமர் நேருவின் படம் நீக்கப்பட்டு, சாவர்க்கரின் படம் இடம் பெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் கார் மீது முட்டை வீசப்பட்டது. ஷிமோகா, மங்களூரு, உடுப்பி உள்ளிட்ட இடங்களில் சாவர்க்கரின் படம் கிழிக்கப்பட்டதால் வன்முறை ஏற்பட்டது.
இதுகுறித்து எடியூரப்பா கூறு கையில், ”ஆங்கிலேயருக்கு எதிராக போராடிய சாவர்க்கரை அவமதிக்கும் போக்கு அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது. எனவே, மக்களுக்கு சாவர்க்கரின் வரலாறை போதிக்கும் வகையில் சாவர்க்கர் ரத யாத்திரை நடத்தப்படுகிறது. இதில் உரை நிகழ்ச்சிகள், பாடல், நாடகம் போன்றவையும் இடம்பெறும்” என்றார். இந்நிலையில் ஸ்ரீராம் சேனா அமைப்பினர் வரும் 31-ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கர்நாடகா முழுவதும் சாவர்க்கர், பால கங்காதர திலகர் ஆகியோரின் படங்கள் வைக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
சாவர்க்கர் ரத யாத்திரைக்கு காங்கிரசும் முஸ்லிம் அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மைசூரு, மண்டியா, சாம்ராஜ்நகர், குடகு ஆகிய மாவட்டங்களில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்று அச்செய்தி தெரிவிக்கிறது.
தேளின் விஷத்துக்கு இவ்வளவு விலையா? ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: