சென்னை: அரசு கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் 108 நேரடி அரசு கல்லூரிகளில் 4,083 கவுரவ விரிவுரையாளர்களும், பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்பட்டுள்ள 41 அரசு கல்லூரிகளில் 1,500 கவுரவ விரிவுரையாளர்களும் பணியாற்றி வருகின்றனர். நடப்பாண்டு முதல் தான் மாத ஊதியம் ரூ.20,000 ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது. கிராமப்பகுதிகளில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்குக் கூட இதைவிட அதிக ஊதியம் வழங்கப்படும் நிலையில், கவுரவ விரிவுரையாளர்களுக்கு மிகக் குறைந்த ஊதியம் வழங்குவதை நியாயப்படுத்த முடியாது. எனவே, இனியும் தாமதிக்காமல், கவுரவ விரிவுரையாளர்களில் தகுதியுடைய அனைவரையும் உடனடியாக பணி நிலைப்பு செய்ய வேண்டும்.