செம்பரத்தைக் குடிநீர்:
தினமும் நீங்கள் பருகும் தேநீர், காபிக்குப் பதிலாக செம்பரத்தைப் பொடியைத் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரலாம். இதனால் தினமும் மலம் முறையாக வெளியேறுவதுடன், வியர்வை நாற்றமும் மறையும். உடலுக்கு உடனடியாகப் புத்துணர்ச்சி தரக்கூடிய உற்சாக பானமாகவும் செம்பரத்தைக் குடிநீர் பயன்படும். தேகத்துக்குப் பளபளப்பைக் கொடுத்து உடலுக்கு குளிர்ச்சியைத் தருவதால் வேனிற்கால பானமாகவும் இதைப் பயன்படுத்தலாம்.
செம்பரத்தை மணப்பாகு…
மலர்களின் உதவியுடன் செய்யப்படும் இனிப்பான `செம்பரத்தை மணப்பாகு’, உடல் வெப்பத்தைக் குறைத்து பலத்தையும் கொடுக்கும் ஸ்வீட் டானிக்! கோடைக்காலங்களில் உண்டாகும் சிறுநீர் எரிச்சலுக்கான எளிமையான, வீட்டு மருந்தும்கூட.
செம்பரத்தை மலர்களோடு அதிமதுரம், ஆடாதோடை, சுக்கு, ஏலம் போன்ற மூலிகைகள் சேர்த்து தயாரிக்கப்படும் செம்பரத்தை – `டீ’, சுவையைக் கொடுப்பதோடு சளி, இருமலுக்குமான மருந்தாகவும் அமையும். செம்பரத்தை மலர்களை வாயிலிட்டு மென்று சுவைக்க, நாப்புண் மறையும். செம்பரத்தை இதழ்களோடு அத்திப் பழம், பால் சேர்த்து அடித்து சாறு போல பருக, உடல்சோர்வு உடனடியாக விலகும்.
பற்ப மருந்துகள்…
இதன் மலர் சாரங்கள், ரத்த சர்க்கரை மற்றும் ரத்தத்தில் அதிகரித்திருக்கும் கொழுப்புச்சத்தின் அளவைக் குறைப்பதாக, எலிகளில் நடைபெற்ற ஆய்வு முடிவு கூறுகிறது. செம்பரத்தையின் இதழ்கள் மனஅழுத்த நோயின் தீவிரத்தைக் குறைப்பதில் முக்கிய பங்காற்றுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.