School Holiday : கனமழை காரணமாக தமிழகத்தின் 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை; புதுச்சேரியிலும் விடுமுறை

Share

கனமழை காரணமாக புதுக்கோட்டை, கடலூர், திருவாரூர், நெல்லை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விருதுநகரில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் தீபாவளி பண்டிகை வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பள்ளிகள் அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக, மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி கவிதா ராமு அறிவித்தார். இதேபோல, தொடர் மழையின் காரணமாக திருவாரூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டார். திருநெல்வேலி மாவட்டத்தில் மழை காரணமாக ஒருநாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு அறிவித்தார். இதேபோல, கடலூர் மாவட்ட ஆட்சியரும் அறிவித்தார். இந்த அறிவிப்புகள் நேற்றே வெளியிடப்பட்டன.

இந்நிலையில் மயிலாடுதுறை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, நாகர்கோவில் ஆகிய மாவட்டங்களிலும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல, கனமழை காரணமாக புதுச்சேரி-காரைக்காலில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று முதல் தீபாவளி பண்டிகை வரை விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்தார்.

சென்னையில் நுங்கம்பாக்கம், தியாகராய நகர், வடபழனி, கோயம்பேடு, கிண்டி, மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் நேற்று காலை முதல் இரவு வரை பலத்த மழை பெய்தது. சென்னை புறநகர் பகுதிகளான மதுரவாயல், திருவேற்காடு. கோவூர், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. தொடர் மழை காரணமாக புறநகர் பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்புகின்றன.

இதேபோல, சென்னை புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, திருமழிசை, நசரத்பேட்டை, மாங்காடு, குன்றத்தூர், குமணன்சாவடி, கரையான்சாவடி, காட்டுப்பாக்கம், வானகரம்,போரூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேலும் சாலைகளில் ஆங்கேங்கே மழை நீர் தேங்கி காட்சி அளிக்கிறது.மேலும் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

புதுச்சேரி மாநகர் பகுதிகளான துறைமுகம், முத்தியால்பேட்டை, சாரம், தட்டாஞ்சாவடி உள்ளிட்ட இடங்களில் நேற்று காலை 11 மணி அளவில் தொடங்கிய மழை, இரவு 7 மணி வரை கொட்டித் தீர்த்தது. இதனால் முக்கிய சாலைகளில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியது. இந்திரா காந்தி சதுக்கப்பகுதியில் உள்ள சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கியதால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. ஒரு சில வாகனங்களில் என்ஜினில் தண்ணீர் புகுந்து பழுதானதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

மேலும் குடியிருப்புகளுக்கு தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். இதேபோல் காலாப்பட்டு, ஊசுடு, பாகூர், வில்லியனூர், திருபுவனை உள்ளிட்ட பகுதிகளில் விட்டு, விட்டு கனமழை பெய்து வருகிறது.

Must Read : சரவெடிக்கு தடை.. தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி: உச்சநீதிமன்றம் அதிரடி

இந்நிலையில், தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்துவரும் தொடர் மழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பிரதான அருவியான குற்றால மெயின் அருவி, புலியருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. குற்றாலம் செங்கோட்டை மேக்கரை வடகரை உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளில் இரவு முழுவதும் மழை பெய்தால் மாவட்டம் முழுவதும் குளிர்ச்சி நிலவிவருகிறது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com