சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பேசிய பொதுக்கூட்டத்தில், அதிமுகவினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மே தினத்தையொட்டி, அதிமுக அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில், சென்னை புரசைவாக்கத்தில் பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் மாலை நடந்தது. இதில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். இதில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: கடந்த 30 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்ட கட்சி அதிமுக. உழைப்பவரே உயர்ந்தவர் என்றுதான் எம்ஜிஆர் கையெழுத்து போடுவார். குருவிக்கு கூட கூடு உள்ளது. ஏழைக்கு வீடில்லை. இதற்காக 6.5 லட்சம் செலவில் ஏழைகளுக்கு தரமான வீடு கட்டி கொடுத்தவர் ஜெயலலிதா. படித்த பட்டதாரிகளின் எண்ணிக்கை 52 சதவீதம் உயர ஜெயலலிதா எடுத்த நடவடிக்கைகளே காரணம். யாராலும் வெல்ல முடியாத இயக்கமாக, இனி எந்த தேர்தல் வந்தாலும் அதிமுகதான் வெற்றி பெறும் என்ற நிலை வந்துள்ளது. இவ்வாறு பேசினார். முன்னதாக, பொதுக்கூட்ட மேடைக்கு ஓபிஎஸ் வந்தபோது மேடையில் நின்றிருந்த முன்னாள் மாவட்ட செயலாளரின் ஆதரவாளர்களை கீழே இறங்கி வரும்படி மாஜி அமைச்சரின் ஆதரவாளர்கள் கோஷம் போட்டுள்ளனர். இதனால் இரண்டு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதமும் சலசலப்பும் ஏற்பட்டது. இது அதிமுகவினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஓபிஎஸ் பொதுக்கூட்டத்தில் அதிமுகவினர் கடும் வாக்குவாதம்
Share
