வெறும் உப்பு நீரல்ல கண்ணீர்… |கண்கள் பத்திரம் – 26

Share

சோகம் மட்டுமல்ல, மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும்கூட கண்ணீரை வரவழைக்கும். வெங்காயம் வெட்டினால்கூட கண்ணீர் கொட்டும். நீங்கள் தெளிவாகப் பார்க்கவும், உங்கள் கண்களின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும் கண்ணீர் அவசியம். அது உங்கள் உணர்ச்சிகளோடும் தொடர்புடையது.

கண்ணீர் எப்படி உருவாகிறது, கண்ணீர் சுரப்பின் அவசியம் என்ன, அது குறைந்தால் என்னவாகும்? விளக்கமாகச் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த விழித்திரை மருத்துவர் வசுமதி வேதாந்தம்…

வசுமதி வேதாந்தம்

கண்ணீரில் பல வகை…

நம் உடல், மூன்று வகையான கண்ணீரை உருவாக்குகிறது.

Basal tears உங்கள் கருவிழியை உயவூட்டுவதற்கும், ஊட்டமளிப்பதற்கும், பாதுகாப்பதற்கும் எப்போதும் உங்கள் கண்களில் அடித்தளத்தில் கண்ணீர் இருக்கும். அதுதான் `பேஸல் டியர்ஸ்’ எனப்படுகிறது. அது கண்ணுக்கும் உலகின் பிற பகுதிகளுக்கும் இடையே ஒரு நிலையான கவசமாகச் செயல்படுகிறது, அழுக்குகளைத் தடுக்கிறது.

Reflex tears கண்கள் புகை, அந்நியப் பொருள்கள் அல்லது வெங்காய வாசனை போன்றவற்றைக் கையாளும்போது அனிச்சை கண்ணீர் உருவாகிறது. இந்த வகை கண்ணீர், பாக்டீரியாவை எதிர்த்துப் போராட உதவும் ஆன்டிபாடிகளைக் கொண்டிருக்கலாம்.

Emotional tears மகிழ்ச்சி, சோகம், பயம் மற்றும் பிற உணர்ச்சி நிலைகளுக்கு பதிலளிக்கும் விதமாக உணர்ச்சிக் கண்ணீர் உருவாகிறது. சில விஞ்ஞானிகள் உணர்ச்சிக் கண்ணீரில் கூடுதல் ஹார்மோன்கள் மற்றும் ரிஃப்ளெக்ஸ் கண்ணீரில் இல்லாத புரதங்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

கண்ணீர்தான், கண்களின் முதல் ஆப்டிகல் லேயர். கண்ணீர் நிறைய சுரக்க வேண்டும். அதன் தரம் நன்றாக இருக்க வேண்டும். அப்போதுதான் கண்களும், கண்களைச் சுற்றியுள்ள இமைகளும் ஆரோக்கியமாக இருக்கும்.

Eye Issues (Representational Image)

வெறும் உப்புத்தண்ணீரல்ல…

கண்ணீர் என்பது வெறும் உப்புத் தண்ணீர் அல்ல. அது உமிழ்நீருக்கு நிகரான அமைப்பைக் கொண்டுள்ளது. மற்றும் என்சைம்கள், லிப்பிடுகள், வளர்சிதை மாற்றங்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

மொத்த கண்ணீரையும் கண்ணில் கட்டி வைத்திருக்கும் உள் சளிப்படல அடுக்கு, கண்ணை நீரேற்றமாக வைத்திருக்கவும், பாக்டீரியாவை விரட்டவும் மற்றும் கருவிழியைப் பாதுகாக்கவும் நீர் நிறைந்த நடுத்தர அடுக்கு (தடிமனான அடுக்கு), கண்ணீரின் மேற்பரப்பை கண்ணுக்குத் தெரியும்படி மென்மையாக வைத்திருக்கவும், மற்ற அடுக்குகள் ஆவியாகாமல் தடுக்கவும் வெளிப்புற எண்ணெய் அடுக்கு என கண்ணீரில் மூன்று அடுக்குகள் உள்ளன.

கண்ணீர் எப்படி உருவாகிறது?

உங்கள் கண்களுக்கு மேலே உள்ள லாக்ரிமல் சுரப்பிகளில் இருந்து கண்ணீர் வருகிறது, பின்னர் உங்கள் கண்ணீர்க் குழாய்கள் (உங்கள் கண்களின் உள் மூலைகளில் சிறிய துளைகள்) மற்றும் மூக்கு வழியாக கீழே வடியும்.

சில நேரங்களில் குழந்தைகள் பிறக்கும்போதே அவற்றின் கண்ணீர்க் குழாய்கள் அடைபட்டிருக்கலாம். இந்த நிலை பொதுவாகத் தானாகவே சரியாகிடும். கண் தொற்று, வீக்கம், காயம் அல்லது கட்டி ஆகியவை பெரியவர்களுக்கு கண்ணீர்க் குழாய் அடைப்பை ஏற்படுத்தலாம்.

கண்கள் பத்திரம்

ஆனால், இன்று நிறைய பேருக்கு கண்ணீர் சுரக்காததுதான் பிரச்னையே. அதைக் கண் மருத்துவத்தில் `டிரை ஐஸ்’ (Dry Eyes) என்று குறிப்பிடுகிறோம். பெரும்பாலும் பலரும் பல மணி நேரமும் ஏசி அறைக்குள் உட்கார்ந்திருக்கிறோம். தாகம் எடுப்பதில்லை எனத் தண்ணீரே குடிப்பதில்லை. தவிர செல்போன், கம்ப்யூட்டர் திரைகளில் இருந்து கண்களை விலக்குவதே இல்லை. போதாக்குறைக்கு நம்மூரில் வருடத்தின் பல மாதங்கள் வெயில் அடிக்கிறது. அந்த வெப்பமும் நம் உடலில் நீர் வறட்சியை ஏற்படுத்துகிறது. இவை எல்லாம் சேர்ந்து கண்களின் வறட்சிக்கு காரணமாகின்றன.

இவை தவிர, உடலில் வேறு ஏதேனும் பிரச்னைகள் இருந்தாலோ, சில வகையான மருந்துகளின் பக்க விளைவாலோகூட கண்களில் வறட்சி ஏற்படலாம். உதாரணத்துக்கு ருமட்டாயிடு ஆர்த்ரைட்டிஸ் பிரச்னை உள்ளவர்களுக்கு கண்களில் அதீத வறட்சி இருப்பது இயல்பு. இன்னும் சொல்லப்போனால் இப்படி அதீத கண் வறட்சியுடன் வருபவர்களை, அவர்களின் கண்களைப் பார்த்து சந்தேகப்பட்டு, அது ருமட்டாயிடு ஆர்த்ரைட்டிஸாக இருக்கலாம் என்று சொல்லி அனுப்புவோம். அவர்களும் பரிசோதனை செய்து பார்த்து அது உறுதியானதைச் சொல்வார்கள்.

வயதானால் கண்ணீர் சுரப்பு குறையும். வயதுக்கு ஏற்ப அடித்தள கண்ணீர் உற்பத்தி குறைகிறது, மேலும், இது கண்களின் வறட்சி அதிகரிக்கவும் வழிவகுக்கும்.

கண்கள்

கண்ணீர் சுரப்பை அதிகரிக்க…

கண்ணீர் சுரப்பை டெஸ்ட் செய்ய `டியர் ஃபங்ஷன் டெஸ்ட்’ உள்ளிட்ட சில எளிய பரிசோதனைகள் உள்ளன. இந்தச் சோதனைகள் கண்ணீரின் அளவு மற்றும் தரத்தைக் கண்டுபிடிக்க உதவும். அதை வைத்து கண்களுக்கான பயிற்சிகள், சொட்டு மருந்துகள் மற்றும் ஒமேகா 3 மற்றும் 6 கொழுப்பு அமிலங்கள் அடங்கிய மாத்திரைகள் பரிந்துரைக்கப் படும். இவற்றில் ஒமேகா கொழுப்பு அமில மாத்திரைகள் கண்களுக்கு மட்டுமன்றி, இதய ஆரோக்கியத்துக்கும் உதவக்கூடியவை.

இவை தவிர தினமும் இரண்டிரண்டு பாதாம் மற்றும் வால்நட் சாப்பிடுவதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும்.

ஆளிவிதை எனப்படும் ஃபிளாக்ஸ் சீட்ஸை பொடித்து, மோரில் கலந்து குடிப்பதும் கண்களின் ஆரோக்கியத்துக்கும் கண்ணீர் சுரப்புக்கும் உதவும்.

– பார்ப்போம்

– ராஜலட்சுமி

பார்வை தொடர்பான உங்கள் கேள்விகளை எங்களுக்கு அனுப்புங்கள். பதில் சொல்லக் காத்திருக்கிறார் டாக்டர் வசுமதி வேதாந்தம்

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com