சைக்கலாஜிகல் டிபெண்டன்ஸ் என்பது ஒரு விஷயத்தை மனரீதியாக சார்ந்திருக்கும் நிலை. உதாரணத்திற்கு சிலருக்கு அடிக்கடி மருத்துவமனைக்குச் சென்று, சத்து ஊசி போட்டுக் கொள்ளத் தோன்றும். உண்மையில் அவர்களுக்கு உடலில் சத்துக்குறைபாடே இருக்காது. ஆனாலும் வலியச் சென்று மருத்துவரிடம் அதைக் கேட்டுப் போட்டுக் கொள்வார்கள். இவர்களை பற்றி தெரிந்த மருத்துவர்கள் மருந்து ஏதும் இல்லாமல் வெறும் டிஸ்டில்டு வாட்டர் ஏற்றிய ஊசியை அவர்களுக்குச் செலுத்துவார்கள். அதிலேயே சம்பந்தப்பட்ட நபர் திருப்தி அடைந்து விடுவார். இருமல் மருந்துக்கு பதில் சுவையான வேறு திரவத்தை பாட்டிலில் நிரப்பிவைத்தாலும் அதை உணராமல் குடித்து திருப்தியடைபவர்கள் இந்த ரகம்தான்.
வீட்டு வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு அடுப்பை அணைப்பது, வீட்டைப் பூட்டுவது போன்ற வழக்கமான விஷயங்களைச் செய்வது போலவே இருமல் மருந்தைக் குடித்துவிட்டுத் தூங்குவதும் பலருக்கும் வாடிக்கையாகவே இருக்கும்.
ஆரம்பத்தில் அரை மூடி, ஒரு மூடி மருந்தில் தொடங்கி போகப்போக அதன் அளவு கூடிக் கொண்டே போகும். ஒரு கட்டத்தில் ஒரு நாளைக்கு ஒரு பாட்டில் மருந்தைக் குடித்தாலும் தூக்கம் வரவில்லை என்ற நிலைக்கு சிலர் செல்வார்கள். அதைதான் பிசிகல் டிபெண்டன்ஸ் என்று குறிப்பிடுகிறோம். ஆனால், பெண்களைப் பொறுத்தவரை பெரும்பாலும் இத்தகைய பிசிகல் டிபெண்டன்ஸுக்ள் சிக்குவதில்லை. உளவியல் ரீதியான சைக்கலாஜிகல் டிபெண்டன்ஸால் பாதிக்கப்படுபவர்கள்தான் அதிகம்.
வெளியூர்களுக்கெல்லாம் செல்லும்போது இருமல் மருந்து எடுத்துச் செல்ல மறந்து விட்டால், சிறிது நேரம் அது குறித்து கவலைப்படுவார்கள். பிறகு அந்த எண்ணமே இல்லாமல் அதன் தேவையும் இல்லாமல் தூங்கி விடுவார்கள். அதுவே வீட்டுக்குத் திரும்பியதும் மருந்தை வைக்கும் வழக்கமான அந்த இடத்தைப் பார்க்கும்போது உளவியல் ரீதியாக ஏற்படும் உந்துதலில், மீண்டும் அதை எடுத்துக் குடிக்க ஆரம்பிப்பார்கள்.