
பட மூலாதாரம், ANI
இன்று (26.07.2022) தமிழ்நாடு, இலங்கையில் வெளியான நாளிதழ்கள் மற்றும் இணையதள செய்திகளில் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்
ஸ்விட்சா்லாந்து வங்கிகளில் இந்தியா்கள் சேமித்து வைத்துள்ள பணம் அனைத்தும் கருப்புப் பணம் (கணக்கில் வராத பணம்) அல்ல என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறியுள்ளதாக தினமணி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.
இது தொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் எழுத்துபூா்வமாக அளித்த பதிலில், ”அண்மையில் வெளியான சில தரவுகளின்படி, கடந்த 2020-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த 2021-ஆம் ஆண்டில் ஸ்விஸ் வங்கிகளில் இந்தியா்களின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. எனினும், அதைக் கருப்புப் பணமாகக் கருதக்கூடாது.
ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்தியா்கள் குறித்து அதிகாரபூா்வ கணக்கீடுகள் ஏதுமில்லை.
வெளிநாட்டு வங்கிகளில் கணக்கில் காட்டாமல் சேமித்துவைத்துள்ள தொகைகள் குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் ரூ.8,468 கோடிக்கும் அதிகமான வரியைச் செலுத்துமாறும் ரூ.1,294 கோடியை அபராதமாகச் செலுத்துமாறும் சம்பந்தப்பட்ட நபா்களிடம் கோரப்பட்டுள்ளது.
கருப்புப் பணச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட 368 வழக்குகளில் ஆய்வு நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட நபா்களிடம் இருந்து ரூ.14,820 கோடி வரியாகக் கோரப்பட்டுள்ளது. இத்தரவுகள் கடந்த மே மாதம் வரையிலானவை” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இனி யூகலிப்டஸ் நடக்கூடாது: உயர் நீதிமன்றம்
பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டில் யூகலிப்டஸ் மரங்களை நடுவதற்கு தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது என தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள வனம் தொடர்பான வழக்குகளை நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிசன் பெஞ்ச் விசாரித்து வருகிறது. இந்த பெஞ்ச் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவின்படி, மலைப்பிரேதசங்களில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபாட்டிகளை திரும்பப்பெறும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாடு வனப்பகுதிகளில் உள்ள அன்னிய மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்குகள் இந்த நீதிபதிகள் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது, அன்னிய மரங்களை அப்புறப்படுத்துவது தொடர்பான அறிக்கை தமிழ்நாடு அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.
மாவட்ட அளவில் கமிட்டிகள் அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அன்னிய மரங்கள் அகற்றுவது தொடர்பாக தமிழ்நாடு அரசு கொள்கை முடிவு எடுத்து, அதுதொடர்பாக கடந்த 13-ந் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாவட்ட அளவில் கமிட்டிகள் உருவாக்கப்படும். அதில், முதன்மை வனப்பாதுகாவலர் தலைவராகவும், அந்தந்த மாவட்ட கலெக்டர், தாவரவியல், விவசாயம், கால்நடை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள், வனத்துறை அதிகாரிகள் உறுப்பினர்களாகவும் இருப்பார்கள்.
இந்த கமிட்டி, அந்தந்த மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் உள்ள அன்னிய மரங்களை அகற்றும் பணிகளை மேற்கொள்ளும். தமிழ்நாட்டில் உள்ள வனப்பகுதியில் இருந்து 10 ஆண்டுக்குள் அன்னிய மரங்கள் அகற்றப்படும். நாட்டிலேயே அன்னிய மரங்களை அகற்ற கொள்கை முடிவு எடுத்து திட்டம் கொண்டு வந்த முதல் மாநிலம் தமிழ்நாடுதான்.
இந்த திட்டத்துக்காக ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை, கிராமப்புற வளர்ச்சி மற்றும் விவசாயத்துக்கான தேசிய வங்கி ஆகிய அமைப்புகளிடம் இருந்து நிதி பெறப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. நீதிபதிகள் அதிருப்தி இந்த அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள், ‘வனங்களை காப்பது தொடர்பாக அறிக்கைகளை மட்டுமே தாக்கல் செய்யும் தமிழ்நாடு அரசு ஆக்கப்பூர்வமாக செயல்படவில்லை’ என்று அதிருப்தி தெரிவித்தனர்.
பின்னர், ‘அன்னிய மரங்களை அப்புறப்படுத்த 10 ஆண்டுகள் காத்திருக்க முடியாது. இந்த பணி விரைவாக நடைபெற தனியாரிடம் கூட ஒப்படைக்கலாம். அன்னிய மரங்களை அகற்ற கொள்கை முடிவு எடுத்துள்ள அரசே, யூகலிப்டஸ் மரங்களை ஏன் நடுகிறது?’ என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர். பின்னர், தமிழ்நாட்டில் இனிமேல் யூகலிப்டஸ் மரங்களை யாரும் நடக்கூடாது. இந்த மரங்களை நடுவதற்கு தடை விதிக்கிறோம் என்று உத்தரவிட்டு, இவ்வழக்கு விசாரணையை ஆகஸ்டு 16-ந் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.
உண்மையான சிவசேனா யார்?
பட மூலாதாரம், Getty Images
உண்மையான சிவசேனா கட்சி யார் என்று முடிவு செய்ய தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இந்து தமிழ் திசை இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்த மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி கடந்த மாதம் கவிழ்ந்தது. சிவசேனாவின் அதிருப்தி எம்எல்ஏக்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பிரிந்து பாஜகவுடன் இணைந்து ஆட்சியை அமைத்துள்ளனர்.
இந்நிலையில், 12 சிவசேனா எம்.பி.க்கள் சேர்ந்து, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் தனியாக மனு அளித்து, தங்களை தனியாகச் செயல்பட அங்கீகரிக்குமாறு கோரி உள்ளனர். மேலும் சிவசேனா கட்சிக்கு உரிமை கோரி தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு ஏக்நாத் ஷிண்டே தரப்பு கடிதம் எழுதியுள்ளது.
இந்த நிலையில், தாங்கள்தான் உண்மையான சிவசேனா என்றும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி குழுவை சிவசேனாவாக அங்கீகரிக்கக் கூடாது என்றும் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி, தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளது.
இந்நிலையில், ஏக்நாத் ஷிண்டே அணியை சட்டப்பேரவை சபாநாயகர், மக்களவை சபாநாயகர் ஆகியோர் அங்கீகரித்துள்ளனர்.
இதையடுத்து உண்மையான சிவசேனா யார் என்பதை முடிவு செய்ய தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா தலைவரும், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வருமான உத்தவ் தாக்கரே மனு தாக்கல் செய்துள்ளார்.
இதுதொடர்பான மனுவில் உத்தவ் கூறியுள்ளதாவது: அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் விவகாரத்தில் இதுவரை முடிவு எடுக்காததால் யார் உண்மையான சிவசேனா என்பதை தேர்தல் ஆணையம் முடிவு செய்ய முடியாது.
அதிருப்தி எம்எல்ஏக்களின் பதவி பறிப்பு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அம்மனு மீது முடிவு செய்யப்படும் வரை தேர்தல் ஆணையம் எந்தவித நடவடிக்கையும் எடுக்க அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு அனுமதித்தால் அது நீதிமன்ற நடவடிக்கையில் தலையிடுவதாக அமைந்துவிடுவதோடு, நீதிமன்ற அவமதிப்பாகவும் மாறிவிடும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
இதனிடையே உத்தவ் தாக்கரேவுடன் இருந்த கட்சியின் மூத்த தலைவரான அர்ஜுன் கோட்கர் நேற்று, சிவசேனா அதிருப்தி குழுத் தலைவரும், மகாராஷ்டிரா முதல்வருமான ஏக்நாத் ஷிண்டே அணியில் இணைந்துள்ளார். இது உத்தவ் தாக்கரே தரப்பினருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது என அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எரிபொருள் வரிசையில் நின்ற யானை
பட மூலாதாரம், SCREENGRAB
நாட்டில் எரிபொருளுக்கான வரிசை தினமும் குறைவின்றி நாடு முழுவதும் காணப்படும் நிலையில், யானையொன்று எரிபொருளுக்காக காத்திருந்த சம்பவம் கண்டியில் பதிவாகியுள்ளது என இலங்கையில் வெளியாகும் தினகரன் நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.
கதிர்காமத்தில் நடைபெறவுள்ள பெரஹெர உற்சவத்தில் கலந்துகொள்ளவுள்ள மியன் ராஜாவை ஏற்றிய லொறியே வரிசையில் காத்திருந்தது.
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையிலிருந்து கதிர்காமத்தை நோக்கி புறப்படுவதற்கு முன்னர் யானையுடன் லொறி எரிபொருள் வரிசைக்குள் நுழைந்தது.
கண்டி- கட்டுகஸ்தோட்டையில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் தனது வாய்ப்பு வரும் வரை யானையும் லொறியில் காத்திருந்தது என்று அந்தச் செய்தி தெரிவித்தது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: