தாம்பத்திய உறவு சுமுகமாக இல்லை என்று பொதுவாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். அதில் எந்த மாதிரியான பிரச்னைகளை உணர்கிறீர்கள் என்பது தெளிவாக இல்லை.
மெனோபாஸின் காரணமாக வெஜைனா பகுதியில் வறட்சி ஏற்பட்டு, அதனால் தாம்பத்திய உறவு முன்பு போல இல்லை என நினைக்கிறீர்களா… அல்லது வேறு ஏதேனும் உளவியல் ரீதியான பயம் காரணமாக அப்படி உணர்கிறீர்களா என்பதையெல்லாம் உங்களை நேரில் பார்த்து விசாரித்தால்தான் கண்டறிய முடியும்.
உங்களுக்கு இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கும் மன அழுத்தத்தை நினைத்து பெரிதாகக் கவலைப்படத் தேவையில்லை. அதையும் தாம்பத்திய உறவு பிரச்னையையும் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டியதில்லை.
உங்களுடைய மன அழுத்தத்துக்கு குடும்ப பிரச்னைகள் காரணமா என்றும் பாருங்கள். குழந்தைகளின் படிப்பு, குடும்ப உறுப்பினர்களின் உடல்நலம் என உங்களையும் அறியாமல் ஒன்றுக்கும் மேலான விஷயங்கள் குறித்த கவலை இருக்கும்போது இப்படி ஏற்படலாம்.
உங்களுடைய பிரச்னை என்னவென்பதை நீங்கள்தான் தெளிவாகத் தெரிந்து, அதைக் கையாளக் கற்றுக்கொள்ள வேண்டும். எந்த மாதிரியான செயல் உங்களை எரிச்சலுக் குள்ளாகிறது, மன அழுத்தத்துக்குள் தள்ளுகிறது என்பதைக் கண்டுபிடியுங்கள்.
ஒரு பிரச்னை குறித்து நீங்கள் மன அழுத்தம் கொள்வதால் அந்தப் பிரச்னைக்குத் தீர்வு வந்துவிடப்போவதில்லை. அந்தப் பிரச்னைக்கான தீர்வை யோசிப்பதுதான் சரியான விஷயமாக இருக்கும்.