பட மூலாதாரம், Getty Images
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
வியாழக்கிழமை இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் பொருளாதார உச்சி மாநாட்டில் உரையாற்றிய மொஹ்சின் நக்வி, தற்போதைய ஆட்சி முறை முற்றிலும் தோல்வியடைந்துவிட்டதாகவும், நாட்டின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண அடிப்படையிலேயே திறமையற்றதாக இருப்பதாகவும் கூறினார்.
இதே கூட்டத்தின்போது நக்வி கரப்பான் பூச்சிகள் குறித்தும் குறிப்பிட்டுப் பேசிய அவர், “நம் இளைஞர்களுக்கு அவர்கள் விரும்புவதை நம்மால் வழங்க முடியவில்லை. நீங்கள் அவர்களை இளைஞர்கள் என்றோ, கரப்பான் பூச்சிகள் என்றோ அல்லது நீங்கள் விரும்பும் எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம். ஆனால் இந்த கரப்பான் பூச்சிகள் அனைத்தும் ஒன்றாகத் திரண்டால், எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றிவிட முடியும்” என்றார்.
உண்மையில், இந்தியாவில் உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி சூர்யகாந்த் அவர்களின் கருத்துக்குப் பிறகு ‘காக்ரோச் ஜனதா கட்சி’ உருவாக்கப்பட்டு, அது போராட்டம் நடத்தி கல்வி அமைச்சரை ராஜிநாமா செய்ய வைத்தது.
தங்களை “கரப்பான் பூச்சி கட்சி பாகிஸ்தான்” என்று அழைத்துக் கொள்ளும் புதிய இயக்கம் ஒன்று சமூக ஊடகங்களில் எழுந்து வரும் காலகட்டத்தில் மொஹ்சின் நக்வியின் இந்தக் கருத்துகள் வந்துள்ளன.
ஊழல், மோசமான ஆட்சி முறை, பாகிஸ்தானின் ஆழமடைந்து வரும் பொருளாதார நெருக்கடி ஆகியவற்றுக்கு சவால் விடுவதே தனது நோக்கம் என்று இந்த அமைப்பு கூறி வருகிறது.
இந்த அமைப்பின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 1.14 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பாளர்கள் உள்ளனர். இதன் சுயவிவரத்தில், இது “பாகிஸ்தான் அதன் மக்களுக்கே தவிர, ஊழல் மாஃபியாக்களுக்கு அல்ல” என்ற முழக்கத்துடன், இளைஞர்களால் நடத்தப்படும் இயக்கம் என்று தன்னைத் தெரிவித்துக் கொள்கிறது.
மொஹ்சின் நக்வி இளைஞர்களின் கோபத்தை நியாயப்படுத்துகிறார். நக்வி பேசுகையில், “கடந்த நான்கு, ஐந்து ஆண்டுகளாக நீங்கள் எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டாலும், இளைஞர்களின் குரலை எழுப்புபவர் யாரும் இல்லாததால் நிலைமை நின்ற இடத்திலேயே நிற்கிறது. உங்கள் அலகுகள் உருவாக்கப்பட்டு, அவர்கள் பொறுப்பேற்று, புதிய தலைத்துவம் வெளி வரும் வரை இந்த வேலை நடக்காது,” என்றார்.
பட மூலாதாரம், Getty Images
‘அமைப்பு தோல்வியடைந்துவிட்டது’
“இளைஞர்களின் உண்மையான கோரிக்கைகள் என்ன? நமது இளைஞர்களுக்கு இரண்டாயிரம் அல்லது நான்காயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கியோ அல்லது டேப்லெட்டுகளை விநியோகித்தோ அவர்களைச் சாந்தமடையச் செய்துவிடலாம் என்று நாம் நினைக்கிறோம், ஆனால் அப்படி அல்ல. அவர்கள் ஒரேயொரு விஷயத்தைத்தான் கேட்கிறார்கள். நிர்வாகம் சரியாக இருக்க வேண்டும், நீதி கிடைக்க வேண்டும், தகுதியின் அடிப்படையில் பணிகள் நடக்க வேண்டும் மற்றும் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்” என்று நக்வி கூறினார்.
மேலும் அவர், “இந்த இளைஞர்களை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம், ஆனால் இந்த இளைஞர் சக்தி அமைப்பாகவும் ஒற்றுமையாகவும் மாறினால், அவர்களால் எல்லாவற்றையும் மாற்றிவிட முடியும். அவர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்துவதற்கு முன்பாக, நாம் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். அவர்கள் உங்களிடம் டேப்லெட்டையோ, பணத்தையோ கேட்கவில்லை. நீங்கள் வாய்ப்புகளை வழங்கினால், அவர்களே ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கான டாலர்களை சம்பாதிக்க முடியும்” என்று தெரிவித்தார்.
“உதாரணமாக, மாதத் தொடக்கத்திலேயே லட்சக்கணக்கில் கடனில் இருந்தால் எந்தவொரு குடும்பத்தையும் நடத்த முடியாது. பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போதே பற்றாக்குறையுடன் தொடங்கும் வகையில்தான் நமது மத்திய அரசின் நிலை இருக்கிறது” என்றும் அவர் குறிப்பிட்டார்.
அவரது கூற்றுப்படி, “ஒவ்வோர் ஆண்டும் கடன் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. பிரதமர் 14-16 மணிநேரம் உழைத்தாலும்கூட, இந்த அமைப்பு மறுசீரமைக்கப்படும் வரை நிலைமை மாறாது. அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரே அறையில் அமர்ந்து, அதற்கு ஒரு நாளோ, ஒரு மாதமோ அல்லது ஓர் ஆண்டோ ஆனாலும் பரவாயில்லை, நாட்டின் ஒவ்வொரு பிரச்னை மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் குறித்து ஒருமித்த கருத்தை எட்ட வேண்டும். அனைவரும் இணைந்து இதை மாற்றாத வரை, நாட்டின் நிலைமை இப்படித்தான் இருக்கும்.”
நக்வியின் இந்தக் கருத்து குறித்து பாகிஸ்தானின் ராணுவப் பேச்சாளரான, இன்டர்-சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸின் இயக்குநர் ஜெனரல் அகமது ஷெரீப் சௌத்ரியிடமும் கேள்வி எழுப்பப்பட்டது.
பாகிஸ்தான் செய்தியாளர் ஒருவர் அகமது ஷெரீப் சௌத்ரியிடம், “பாகிஸ்தானில் நிர்வாகம் என எதுவும் இல்லை என்றும் இந்த அமைப்பு தோல்வியடைந்து விட்டதாகவும் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி கூறியுள்ளார். நீங்கள் இதனுடன் உடன்படுகிறீர்களா?” என்று கேட்டார்.
இதற்குப் பதிலளித்த ஐ.எஸ்.பி.ஆர் (ISPR) பேச்சாளரான ஜெனரல் அகமது ஷெரீப் சௌத்ரி, “உள்துறை அமைச்சர் கூறியது அவருடைய தனிப்பட்ட கருத்து. அதில் நான் கருத்து கூற விரும்பவில்லை, ஆனால் நல்ல நிர்வாகமானது பாதுகாப்பான மற்றும் நிலையான பாகிஸ்தானில்தான் சாத்தியமாகும். அது இல்லாமல் நமது விவகாரங்கள் தீர்க்கப்பட முடியாது. கடந்த 12 ஆண்டுகளாக அனைத்துக் கட்சிகளும் இந்த விஷயத்தில் உடன்பட்டுள்ளன. நல்ல நிர்வாகம் எவ்வாறு சாத்தியமாகும் என்பதை அரசியல் கட்சிகள்தான் தீர்மானிக்க வேண்டும்,” என்றார்.
பட மூலாதாரம், @ArifAlvi
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் என்ன கூறினார்?
பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் முனைவர் ஆரிஃப் அல்வி, மொஹ்சின் நக்வியின் கருத்துகளுக்கு பதிலளித்துள்ளார். அதுகுறித்து தனது ‘எக்ஸ்’ பக்கத்தில், “இந்த அமைப்பு தோல்வியடையவில்லை. அமைப்பைக் கைப்பற்றியவர்கள்தான் அதைத் தோல்வியடையச் செய்துள்ளனர். அவர்கள்தான் அதை அழித்துள்ளனர்” என்று எழுதியுள்ளார்.
மேலும், “நாடாளுமன்ற ஜனநாயகம் மக்கள் ஆணை என்ற ஒரே அடிப்படையில்தான் நிலை பெற்றுள்ளது. இதற்காகவே தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. தேர்தல்களில் முறைகேடு செய்யப்பட்டு மக்கள் ஆணை திருடப்படும்போது, மக்களிடம் இருந்து சட்டபூர்வமான அங்கீகாரம் பெறாதவர்கள் இறுதியில் நாட்டை அதலபாதாளத்திற்கு அழைத்துச் செல்கின்றனர்” என்றும் அல்வி தனது பதிவில் கூறியுள்ளார்.
“லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கைக்குரிய தலைவரான இம்ரான் கானை சிறையில் அடைப்பதும், மக்களின் விருப்பத்திற்கு மாறாக ஊழல் நிறைந்த, பாசிச, உயரடுக்கு ஆட்சியை நிறுவுவதும் அமைப்பின் தோல்வி அல்ல. இது அமைப்பை வலுவிழக்கச் செய்வதன் மற்றும் அதனுடன் மோசடி செய்வதன் விளைவு” எனவும் கடுமையாக விமர்சனத்தை அவர் முன்வைத்துள்ளார்.
அவரைப் பொறுத்தவரை, “பாகிஸ்தானின் நாடாளுமன்ற அமைப்பு தோல்வி அடையவில்லை. 1977 முதல் தொடர்ச்சியாக அதிகார மையங்களை வலுவிழக்கச் செய்து, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலம் நாட்டை ஆளும் உரிமையில் இருந்து மக்களை மறுத்து வருகிறது.”
“பாகிஸ்தான் மக்களுக்கு நான் விடுக்கும் கோரிக்கை என்னவென்றால், இந்த விவாதத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். இது ஓர் அரசியல் புகைமூட்டம், இதன் நோக்கம் உண்மையான பிரச்னைகளில் இருந்து கவனத்தைத் திசை திருப்புவதே” என்றும் தெரிவித்துள்ளார்.
குடிமக்களுக்கு வசதிகளைச் சென்றடையச் செய்வதற்கான ஒரே வழி கூடுதல் நிர்வாக அலகுகளை உருவாக்குவதே என்று நக்வி கூறினார். புதிய தலைமைத்துவத்தின் தேவையையும் வலியுறுத்திய அவர், நாட்டின் இளைஞர்கள் நீதி, தகுதி அடிப்படையில் வாய்ப்புகள் மற்றும் வேலைவாய்ப்பையே விரும்புவதாகக் குறிப்பிட்டார்.
பாகிஸ்தான் மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் நய்யர் புகாரி, ஆங்கில நாளிதழான ‘டான்’ (Dawn) இதழிடம் கூறுகையில், “புதிய நிர்வாக அலகுகள் உருவாக்கம் குறித்த பிரச்னையை கட்சியின் மத்திய செயற்குழு பரிசீலிக்கும். ஆனால் அதற்கான வழி நிர்வாக உத்தரவுகள் மூலமாக அல்லாமல், அரசியலமைப்பு சார்ந்த வழிமுறையாக இருக்க வேண்டும்” என்றார்.
புதிய மாகாணங்கள் உருவாக்கம் அல்லது மாகாணத்தின் எல்லைகளில் மாற்றம் செய்வது என்பது சம்பந்தப்பட்ட மாகாண சட்டமன்றம், தேசிய பேரவை, செனட் ஆகியவற்றில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இல்லாமல் சாத்தியமில்லை என்று புகாரி கூறினார். புதிய மாகாணங்கள் எந்தவொரு நிர்வாக உத்தரவு மூலமும் உருவாக்கப்பட முடியாது என்கிறார் அவர்.
தெற்கு பஞ்சாப் உள்ளிட்ட புதிய மாகாணங்களை உருவாக்குவதில் தீவிரம் காட்டப்பட்டால், அந்த விவகாரத்தை நாடாளுமன்றத்திற்குக் கொண்டு வந்து அரசியலமைப்பு செயல்முறையை முடிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
பஞ்சாப் மற்றும் மத்திய அரசு இரண்டிலும் அதிகாரத்தில் உள்ள பாகிஸ்தான் மக்கள் கட்சி, தனது சொந்த மாகாணத்திலேயே இந்தப் பணியை முதலில் தொடங்க வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சருக்கு புகாரி வேண்டுகோள் விடுத்தார். தெற்கு பஞ்சாப் மாகாணம் உருவாக்கம் தொடர்பான தீர்மானம் ஏற்கெனவே பஞ்சாப் மாகாண சட்டமன்றத்தில் நிலுவையில் இருப்பதை அவர் நினைவூட்டினார்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு