கிளாஸ்கோவில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில், ஆடவர் 65 கிலோ பளுதூக்குதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார் தமிழகத்தைச் சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி.
நேற்று நடைபெற்ற ஆடவர் 65 கிலோ பளுதூக்குதல் பிரிவு போட்டியில் பங்கேற்ற தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி, மொத்தமாக 286 கிலோவைத் தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியிருக்கிறார்.

கடந்த 2018-ல் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் 62 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற அவர், மொத்தமாக 266 கிலோ தூக்கி ஆறாம் இடம் பிடித்தார்.
அதன் பின்னர் காயம், அதற்கான சிகிச்சை உள்ளிட்ட காரணத்தால் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கு கொள்ள முடியாமல் இருந்தார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் மூலம் சர்வதேச களத்துக்குத் திரும்பி தற்போது வெள்ளி வென்றிருக்கிறார்.
பலரும் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வரும் நிலையில், தமிழக முதல்வர் விஜய்யும் தனது வாழ்த்தைத் தெரிவித்து, ஊக்கத்தொகையை அறிவித்திருக்கிறார்.