'டிரான்சிஷன் ஃபேஸில் இருக்கிறோம்!' – தொடர் படுதோல்விக்கு கேப்டன் ஷ்ரேயாஸ் விளக்கம்

Share

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி படுதோல்வியுடன் இழந்துள்ளது. மூன்றாவது போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்ற நிலையில், அணியின் தொடர் சொதப்பல்களுக்குக் காரணம் என்ன என்பது குறித்து கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் விளக்கம் அளித்துள்ளார்.

போட்டிக்குப் பிறகு பேசிய ஷ்ரேயாஸ் ஐயர், தனது ஏமாற்றத்தை வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டார். “மீண்டும் ஒரு ஏமாற்றமான போட்டி. 158 ரன்கள் என்பது இந்தப் பிட்ச்சில் ஒருபோதும் போதுமான ஸ்கோர் இல்லை. இங்கிலாந்து எவ்வளவு வேகமாக அதை சேஸ் செய்தது என்பதைப் பார்த்தாலே புரியும். பந்துவீச வந்தபோது, பந்துவீச்சாளர்களிடம் ஒரே லென்த்தில் தொடர்ந்து பந்துவீசுமாறு கூறினேன். ஆனால், எங்கள் திட்டங்களைச் செயல்படுத்துவதில் நாங்கள் மீண்டும் ஒருமுறை தோற்றுவிட்டோம்,” என்று கூறினார்.

தனிப்பட்ட ஆட்டத்தில் திருப்தி, ஆனால்…

இந்தப் போட்டியில் இந்திய அணியின் சார்பில் தனி ஒருவராகப் போராடிய ஷ்ரேயாஸ், ஆட்டமிழக்காமல் 80 ரன்கள் குவித்தார். தனது பேட்டிங் குறித்து மகிழ்ச்சி தெரிவித்தாலும், அணியின் தோல்வியால் அது அர்த்தமற்றதாகிவிட்டதாகக் குறிப்பிட்டார்.

“நிச்சயமாக எனது ஆட்டத்தில் எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால், அது அணியின் வெற்றிக்கு உதவவில்லை என்றால், அதற்கு மதிப்பில்லை. நான் எப்போது விளையாடினாலும், அணிக்காக சிறப்பாகச் செயல்பட்டு வெற்றியைப் பெற்றுத்தர வேண்டும் என்றே நினைப்பேன். துரதிர்ஷ்டவசமாக, இன்று அது நடக்கவில்லை,” என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.

புதிய வீரர்களுடன் மாற்றத்தில் இருக்கிறோம்!

அணியின் தொடர் தோல்விகள் குறித்துக் கேட்கப்பட்டபோது, இந்திய அணி ஒரு முக்கியக் காலகட்டத்தில் இருப்பதாக ஷ்ரேயாஸ் குறிப்பிட்டார். “நாங்கள் ஒரு ‘டிரான்சிஷன் ஃபேஸில்’ (மாற்றத்திற்கான காலகட்டம்) இருக்கிறோம். இந்தச் சமயத்தில் தவறுகள் நடப்பது இயல்புதான். கள சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்வதன் முக்கியத்துவத்தை வீரர்கள் உணர வேண்டும். அணியில் விரைவாகக் கற்றுக்கொள்ளும் வீரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தங்களைத் தாங்களே சுயபரிசோதனை செய்துகொள்வார்கள் என நம்புகிறேன்,” என்று இளம் வீரர்களுக்கு ஆதரவாகப் பேசினார்.

முதலிடத்தைக் குறிவைக்கும் இங்கிலாந்து!

மறுபுறம், இங்கிலாந்து கேப்டன் ஹாரி ப்ரூக், தொடரை வென்ற மகிழ்ச்சியில் இருந்தார். “இந்தியாவை வீழ்த்துவது எப்போதுமே மகிழ்ச்சியான ஒன்று. 3-0 எனத் தொடரை வென்றது அற்புதமாக உள்ளது. கள சூழலுக்கு ஏற்ப நாங்கள் எங்களை மாற்றிக்கொண்ட விதமும், வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு இடையேயான தகவல் பரிமாற்றமும்தான் எங்கள் வெற்றிக்கு முக்கியக் காரணம்,” என்றார். மேலும், வேகப்பந்து வீச்சாளர்கள் ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் ஜோஷ் டங் ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சையும் அவர் பாராட்டினார்.

சவுத்தாம்ப்டனில் நடைபெறவுள்ள கடைசிப் போட்டியிலும் இங்கிலாந்து வெற்றி பெற்றால், டி20 தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்தியாவைப் பின்னுக்குத் தள்ளி, நம்பர் 1 இடத்தைப் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com