ஆனால், இதில் பெரும் சிக்கலில் சிக்கயிருப்பது ஆப்பிள் நிறுவனம் தான். முந்தைய காலங்களில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன் மொபைல்களில் 30 பின் டாக் கனெக்டர் தான் வரும். அதன்பின்னர் அதைவிடவும் மேம்பட்ட வடிவமான லைட்னிங் கனெக்டரைப் பயன்படுத்தத் தொடங்கியது ஆப்பிள். யூஎஸ்பி- C கனெக்டர்களைப் போலவே, லைட்னிங் கனெக்டர்களும் பல்வேறு வசதிகளைத் தன்னுள்ளே பெற்றிருந்தது. ஸ்லிம்மாக இருப்பதும், வேகமாக மின்சாரத்தைக் கடத்தவும் அது பயன்பட்டது. ஆப்பிள் நிறுவனம் தற்போது தயாரிக்கும் லேப்டாப்களில் எல்லாம் யூஎஸ்பி- C கனெக்டரைத்தான் பயன்படுத்தி வருகிறது. ஆனால், மொபைல்களுக்கு மட்டும் இன்னமும் லைட்னிங் கனெக்டரைத் தான் பயன்படுத்தி வருகிறது .
அதற்கான பிரத்யேகக் காரணங்களும் இல்லாமல் இல்லை. வாடிக்கையாளர்கள் ஐஃபோனைப் பயன்படுத்துவது என்பது பல காலமாகவே ஒரு ஸ்டேட்டஸ் சிம்பலாகவே பார்க்கப்பட்டு வருகிறது. அதில் இருக்கும் எல்லா வசதிகளையும் கடந்து ஸ்டேட்டஸ் சிம்பலும் அதைப் பயன்படுத்துவதற்கு ஒரு முக்கிய காரணம். அப்படியெனில், அதற்கென பிரத்யேகமாக சில விஷயங்களை உருவாக்க வேண்டும். உண்மையில், டைப்- சி கனெக்டர் பயன்படுத்தலாம் என முதலில் முடிவெடுத்த நிறுவனம் ஆப்பிள் தான். ஆனால், அப்போது இந்த தொழில்நுட்பம் அவ்வளவு பரவலாக வரவில்லை. அதனாலேயே , பிரதேயகமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே லைட்னிங் கனெக்டரைத் தேர்வு செய்தது ஆப்பிள் நிறுவனம். அதே போல், தற்போது டைப் சி கனெக்டர்களுக்கு மாற வேண்டும் என்றால், ஏற்கெனவே லைட்னிங் கனெக்டர்களுக்கான உதிரிபாக விற்பனையும் பாதிப்படையும். இவையெல்லாவற்றையும் ஆப்பிள் நிறுவனம் கருத்தில் கொண்டு என்ன செய்யப் போகிறது என்பதைத்தான் ஒட்டுமொத்த டெக் உலகமும் எதிர்நோக்கி காத்திருக்கிறது.