தனக்கே தெரியாத சமூகநீதி பற்றி திமுகவிற்கு பாடம் எடுப்பதா? முன்னாள் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமிக்கு டி.ஆர்.பாலு எம்.பி கண்டனம்

Share

சென்னை: அதிமுகவின் முன்னாள் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தனக்கே தெரியாத ‘சமூகநீதி’ பற்றி திமுகவிற்குப் பாடம் எடுத்திருப்பதற்குக் திமுக பொருளாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு கடும்  கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து திமுக பொருளாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு வெளியிட்ட அறிக்கை: குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ள அதிமுகவின் முன்னாள் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி – தனக்கே தெரியாத ‘சமூகநீதி’ பற்றி திமுகவிற்குப் பாடம் எடுத்திருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுக, முத்தமிழறிஞர் கலைஞரும் தான் பட்டியலினச் சமூகத்திலிருந்து மாபெரும் தலைவரான கே.ஆர்.நாராயணன் இந்த நாட்டின் குடியரசுத் தலைவராக ஆக்கியது. பாபு ஜெகஜீவன்ராம் மகள் மீராகுமார் தேர்வு செய்யப்படுவதற்குத்  திமுக தான் உறுதுணையாக இருந்தது. பட்டியலின – பழங்குடியின மக்களுக்கு இட ஒதுக்கீட்டை உயர்த்தியது மட்டுமல்ல – உள்இடஒதுக்கீடு அளித்து உண்மையான சமூகநீதியை அளித்தது திமுக அரசும் – கலைஞரும்தான் என்ற பாலபாடம் எல்லாம் பாவம் பழனிசாமிக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. அதைத் தெரிந்து கொள்ளும் மனநிலையிலும் அவர் இல்லை.

பாஜ நிறுத்தியுள்ள குடியரசுத் தலைவர் வேட்பாளரை ஆதரிக்க – புலி வேடம் போட்டுத் திமுக மீது பழனிசாமி பாய்கிறார். திமுகவை வீண் வம்புக்கு இழுத்து தன் கட்சிக்குள் நடக்கும் “ஸ்ரீவாரி மண்டப” கூத்துக்களை மறைக்க பழனிசாமி முயற்சி செய்கிறார். அது நடக்காது. இன்னும் சில நாட்களில் இந்த “கூத்து” மிக மோசமான – குழாயடிச் சண்டையாக மாறப் போகிறது என்பதில் சந்தேகமில்லை. திமுகவை பொறுத்தவரை ஜனநாயக ரீதியாக எதிர்கட்சிகளின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தி ஜனநாயகத்தை, கூட்டாட்சித் தத்துவத்தை, மதச்சார்பின்மையை, மாநில உரிமைகளை மதிக்கும் ஒரு குடியரசுத் தலைவர் வேண்டும் என்ற நோக்கில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரை ஆதரிக்கிறது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com