லார்ட்ஸ் மைதானத்தில் ஒரு போட்டியை இழப்பதென்பது இங்கிலாந்து கிரிக்கெட்டிற்கே நிகழ்ந்த மிகப்பெரிய அவமானமாக கருதப்படும். அப்படி லார்ட்ஸில் ஒரு போட்டியை தோற்றால் அதற்கடுத்த போட்டியில் இங்கிலாந்து எத்தனை மூர்க்கமாக பதிலடி கொடுக்கும் என்பதை லீட்ஸில் காண முடிந்தது. முதல் இன்னிங்ஸிலேயே இந்திய அணி 78 ரன்களுக்கு ஆல் அவுட். ஆண்டர்சன், ராபின்சன், ஓவர்டன் ஆகியோர் வெறித்தனமாக பந்து வீசியிருந்தனர். இங்கிலாந்து சார்பில் இந்த முறையும் ஜோ ரூட் சதமடித்தார். ரோரி பர்ன்ஸ், ஹசீப் ஹமீது போன்றோரும் ரூட்டிற்கு ஒத்துழைப்பு கொடுக்க இங்கிலாந்து 400+ ஸ்கோரை எட்டியது. இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங்கே செய்யவில்லை. இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வென்றது.
தொடர் 1-1 என சமநிலையில் இருந்த சமயத்தில் ஓவலில் இந்தப் போட்டி நடைபெற்றது. இந்திய அணியின் முக்கியமான பேட்டர்கள் கொஞ்சம் சுமாராகவே ஆடியிருந்தாலும் டெய்ல் எண்டர்கள் இந்திய அணியைக் கரைசேர்த்திருந்தனர். இரண்டு இன்னிங்ஸிலுமே ஷர்துல் தாகூர் அரைசதம் அடித்து அசத்தியிருந்தார். கூடவே உமேஷ் யாதவ், பும்ரா போன்றோரும் மதிப்புமிக்க ரன்களைச் சேர்த்துக் கொடுத்தனர். முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற போதும் நான்காவது இன்னிங்ஸில் இங்கிலாந்துக்கு 368 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. டிராவுக்காக ஆடுவதுதான் இங்கிலாந்தின் இலக்காக இருந்தது. ஆனால், அதைக்கூட அவர்களால் செய்ய முடியவில்லை. 210 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியிருந்தனர். உமேஷ் யாதவ், பும்ரா, ஷர்துல் என இந்த முறையும் இந்திய பௌலர்கள் அசாத்தியமாக வீசியிருந்தனர்.