இலங்கையின் கொழும்பு மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவிடம் 61 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்தது. அதன் பின்னர், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் கடுமையான கருத்துகளை முன்வைத்திருக்கிறார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தையும், அணியின் மூத்த வீரர்களையும் அவர் நேரடியாகக் குறிவைத்து கடுமையாகச் சாடியுள்ளார்.
“நட்சத்திர அந்தஸ்து மட்டுமே… வெற்றி எங்கே?’
2026 டி20 உலகக் கோப்பை குரூப் ‘ஏ’ போட்டியில் இந்தியா 175 ரன்கள் குவிக்க, அதனைத் தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் 114 ரன்களில் ஆல்-அவுட் ஆகி தோல்வியடைந்தது.
இந்தத் தோல்விக்குப் பிறகு நேரலைத் தொலைக்காட்சி விவாதத்தில் பேசிய அக்தர்,
“Babar Azam, Shaheen Afridi, Shadab Khan போன்ற மூத்த வீரர்கள் முக்கியமான போட்டிகளில் தொடர்ந்து சொதப்புகிறார்கள். ஆனாலும் இவர்களுக்கு ஏன் தொடர்ந்து ஆதரவு? பெரிய நட்சத்திரங்களாகக் கொண்டாடுகிறீர்கள்… ஆனால் ஒரு போட்டியைக்கூட வென்று தர முடியவில்லை!” எனக் கேள்வி எழுப்பினார்.

இதோடு நிற்காமல், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவரையும் அவர் விட்டுவைக்கவில்லை.
Pakistan Cricket Board தலைவர் Mohsin Naqvi குறித்து பேசுகையில்,
“உலகிலேயே மிகப்பெரிய குற்றம் என்ன தெரியுமா? தகுதி இல்லாத ஒருவரிடம் மிகப்பெரிய பொறுப்பை ஒப்படைப்பது. திறமை இல்லாதவரிடம் பதவி கொடுத்தால், அவர் அந்த அமைப்பையே அழித்துவிடுவார்!” என்று கடுமையாக விமர்சித்தார்.
இந்தியாவிடம் தொடர்ந்து அடிவாங்கும் பாகிஸ்தான் அணியின் நிலைமைக்கு, வீரர்களைவிட நிர்வாகமே அதிக பொறுப்பு ஏற்க வேண்டும் என வலியுறுத்திய அக்தர்,
“பதவியின் முக்கியத்துவம் தெரியாதவர்களிடம் அதிகாரம் கொடுத்தால் விளைவுகள் இப்படித்தான் இருக்கும்” என்று வேதனை தெரிவித்தார்.
இந்தியாவிடம் ஏற்பட்ட அவமானகரமான தோல்வியும், அதனைத் தொடர்ந்து சோயப் அக்தர் முன்வைத்த இந்தக் கடும் விமர்சனங்களும், தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகின்றன.!