அழகான இந்தக் குன்றின் மீது அருள்பாலிக்கிறார் ஸ்ரீ நித்ய கல்யாண பிரசன்ன வேங்கடேச பெருமாள். இந்த ஆலயம் இரண்டாம் குலோத்துங்கச் சோழ மன்னனால் கட்டப்பட்ட பெருமையை உடையது.
புராண காலத்தில் அறுபத்து மூன்று ரிஷிகள் இங்கே பெருமாளை நோக்கிக் கடும் தவம் செய்தனர். அவர்களுக்குப் பெருமாள் காட்சி கொடுத்து அருள்பாலித்த தலம் இது. மேலும் அகத்திய முனிவர் தவம் செய்த வைணவத் தலமும் இதுவே என்னும் பெருமையும் இதற்கு உண்டு.
கோயிலினுள்ளே, அழகுற தரிசனம் தருகிறார் ஸ்ரீநித்தியகல்யாண பிரசன்ன வேங்கடேசபெருமாள். சங்கு- சக்கரம்தாரியாக நின்றகோலத்தில் அருட்த்திருக்கோலம் அருள்கிறார் பெருமாள்.
பெருமாள் எப்போதும் மகாலட்சுமியைத் தன் மார்பில் சுமந்திருப்பார். இந்தத் தலத்தில் கூடுதலாகத் தானே மகாலட்சுமி சொருபமாகவும் அருள்பாலிக்கிறார். இங்கு வந்து வழிபடும் பக்தர்கள் தாயாரின் பரிபூரண அருளைப் பெறுவார்கள் என்பது ஐதிகம். எனவே இங்கே பெருமாளுக்கு வஸ்திரமாக வேஷ்டி சாத்துவதில்லை. மாறாகப் புடவையையே சாத்துக்கிறார்கள். பெருமாள் புடவையில் கம்பீரமாகவும் அதேவேளையில் தாயாரின் கருணையோடும் அருள்பாலிக்கிறார். இது இந்த ஆலயத்தின் தனிச்சிறப்பு என்றே சொல்லலாம்.