குடிபோதையில் சாலையோரம் சிலர் விழுந்து கிடப்பதை பார்க்க முடியும். அவர்கள் எழுந்து வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று நினைத்தாலும், அவர்களால் எழுந்து செல்ல முடியாது. அந்த அளவுக்கு அவர்கள் மது மயக்கத்தில் இருப்பார்கள்.
மத்திய பிரதேசத்தில் ஒருவர் குடிபோதையில் கீழே விழுந்து கிடந்ததை பொதுமக்கள் பிணம் என்று நினைத்துவிட்டனர்.
சாகர் மாவட்டத்தில் உள்ள குராய் என்ற கிராமத்தில் ஒருவர் சாலையோரம் கிடந்த சகதியில் குப்புற விழுந்து கிடந்தார். அப்பகுதி வழியாக சென்றவர்கள் அதனை பார்த்தும் கண்டுகொள்ளாமல் சென்றனர்.
தொடர்ந்து 6 மணி நேரமாக அந்த இளைஞர் அசைவற்று குப்புற விழுந்து கிடந்தார். இதனால் அவர் இறந்து கிடக்கிறார் என்று நினைத்த கிராம மக்கள், போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனே போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பிணத்தை தூக்கிச்செல்ல வாகனமும் வந்தது.
கிராம மக்கள் அங்கு கூடினர். போலீஸார் குப்புற விழுந்து கிடந்த நபரை புரட்டிப்போடுவதற்காக குனிந்தபோது எந்த வித அசைவும் இல்லாமல் கிடந்த நபர் திடீரென எழுந்தார்.
அதனை பார்த்து போலீஸாரும், அங்கு கூடியிருந்த பொதுமக்களும் அதிர்ச்சியடைந்தனர்.
திடீரென எழுந்த நபர்,”நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன்’ என்று போலீஸாரிடம் தெரிவித்தார்.