பட மூலாதாரம், Getty Images
(இது, சமீபத்திய செய்தி புதுப்பிக்கப்பட்டு வருகிறது.)
குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
அரச நிதியை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், ரணில் விக்ரமசிங்க விசாரணைகளுக்காக இன்று அழைக்கப்பட்டிருந்தார்.
இதன்படி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பில் உள்ளகுற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று முற்பகல் ஆஜராகியிருந்தார்.
ரணில் விக்ரமசிங்கவிடம் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலப் பகுதியில் அரச நிதியை பயன்படுத்தி தனிப்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணத்தை மேற்கொண்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.
தனது மனைவியான மைத்திரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவிற்காக லண்டனுக்கு , அரச நிதியை பயன்படுத்தி விஜயம் மேற்கொண்டதாக கூறப்பட்டது.
இந்த விடயம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி நீதிமன்றத்திற்கு விடயங்களை அறிவித்திருந்தது.
இதையடுத்து, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரத்தியேக செயலாளர் சென்ரா பெரேரா மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரிடம் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை நடத்தியிருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்துக்கொள்வதற்காக ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று காலை 09 மணிக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இதன்படி, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் அவர் முன்னிலையாகியதை அடுத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இன்றைய தினம் கோட்டை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு