Ashwin: கோபம், நடுவரிடம் வாக்குவாதம்… அஷ்வினுக்கு அபராதம் விதித்த TNPL!

Share

கடந்த ஜூன் 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் இடையிலான TNPL போட்டியின்போது ரவிச்சந்திரன் அஷ்வினின் கொதிப்பான செய்கைக்கு அவரது போட்டி ஊதியத்தில் 30% அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

கோவையில் நடைபெற்ற இந்த போட்டியின்போது அஷ்வின் சாய் கிஷோர் வீசிய பந்தில் எல்.பி.டபுள்யூ முறையில் அவுட் ஆனதாக நடுவர் கிருத்திகா அறிவித்தார். இந்த முடிவால் அதிருப்தி அடைந்தார் அஷ்வின்.

Ashwin
Ashwin

நடுவரிடம் களத்திலேயே பந்து லெக் ஸ்டம்புக்கு வெளியில் குத்தியதாக வாதாடினார் அஷ்வின். திண்டுக்கல் டிராகன்ஸ் அணி ஏற்கெனவே இரண்டு வைட் பால்களுக்கு ரிவியூக்களைப் பயன்படுத்தியிருந்ததால் அவரால் ரிவியூ எடுக்கவும் முடியவில்லை.

மைதானத்தில் இருந்து வெளியேறும்போது கோபத்தில் பேட்டால் பேடை அடிப்பது, கையுறைகளை கழற்றி எரிவது போன்ற செய்கைகளில் ஈடுபட்டார் அஷ்வின். இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலானது.

இது குறித்து TNPL அதிகாரி ஒருவர் பேசியதாக கிரிக்பஸ் தளம் வெளியிட்டுள்ள செய்தியில், போட்டிக்குப் பிறகு நடுவருடன் விசாரணை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

நடுவரிடம் கருத்து வேறுபாடு தெரிவித்து சண்டையிட்டதற்காக 10% மற்றும் உபகரணங்களைத் தவறாக பயன்படுத்தியதற்காக 20% என போட்டி வருவாயில் 30% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அஷ்வின் அபராதங்களை ஏற்றுக்கொண்டுள்ளார்.

போட்டியின் 5 ஓவர்களில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்திருந்தபோது, 11 பந்துகளில் 18 ரன்கள் அடித்திருந்த அஷ்வின் அவுட் ஆனார். அதன் பிறகு 94 ரன்களில் அவரது அணி ஆல் அவுட் ஆனது. சேஸ் செய்த திருப்பூர் தமிழன்ஸ் அணி எளிதாக இலக்கை எட்டி வெற்றிபெற்றது.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com