2017ம் ஆண்டு முதல் முறையாக இந்தியாவில் அண்டர் 17 உலகக் கோப்பை தொடர் நடந்தபோது அன்வர் அலியின் பெயர் வெகுவேகப் பேசப்பட்டது. அந்த இளம் இந்திய அணியின் முக்கிய அங்கமாய் இருந்தவர் அன்வர் அலி. தன் டிஃபன்ஸிவ் திறமைகளால் அப்போதே பலராலும் பாராட்டப்பட்டார் அவர். அவருடைய வளர்ச்சி தொடர்ந்துகொண்டே இருந்ததால், ஐ.எஸ்.எல் தொடரின் மிகப்பெரிய அணிகளுள் ஒன்றான மும்பை சிட்டி எஃப்.சி அவரை ஒப்பந்தம் செய்தது. இந்திய கால்பந்தின் மிகப்பெரிய நட்சத்திரங்களுள் ஒருவராக உருவெடுப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், காலம் அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியைப் பரிசளித்தது.
ஹைபர்டிராபிக் மயோகார்டியாபதி (Hypertrophic Myocardiopathy) என்னும் சிக்கலால் பாதிக்கப்பட்டார் அன்வர் அலி. இதன் காரணமாக இதயத் தசைகள் இறுகிவிடும். அப்படியாகும்போது ரத்தத்தை செலுத்தும் இதயத்தின் திறன் குறையும். இந்தப் பிரச்னை அவருக்கு ஏற்பட்டதால் இந்திய கால்பந்து சங்கமும், மும்பை சிட்டி அணியும் சிகிச்சைக்காக அவரை பிரான்ஸுக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்தன.
இந்த சிக்கலால் அவருக்கு பெரிய பிரசசனைகள் ஏற்பட்டுவிடும் என்பதால், அவர் இனி கால்பந்து விளையாடுவது சரியானது அல்ல என்று மருத்துவர்கள் அறிவித்தனர். அதனால், அவர் விளையாடவோ, ஏன் கால்பந்து பயிற்சி செய்யவோ கூடாது என்று அறிவித்தது இந்திய கால்பந்து சங்கம். ஒரு பிரகாசமான கால்பந்து கரியருக்கு ஒரு சோகமான முடிவு எழுதப்பட்டது. அப்போது அன்வர் அலிக்கு வயது 19 தான்!