கடைசி பந்தில் ரன்னில் அவுட்… தோனியை கண்முன் கொண்டுவந்த RCBW; WPL வரலாற்றில் முதல் சூப்பர் ஓவர்

Share

மகளிர் பிரீமியர் லீக் (WPL) கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக அரங்கேறிய சூப்பர் ஓவரில், ஆர்.சி.பி அணியை உத்தரப்பிரதேச வாரியர்ஸ் அணி வீழ்த்தி வெற்றிபெற்றிருக்கிறது.

நடப்பு WPL-ன் ஒன்பதாவது போட்டியில் பெங்களூரு அணியும், உத்தரப்பிரதேச அணியும் சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று மோதின. இதில், முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் குவித்தது. பெங்களூரு அணியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய எல்லிஸ் பெர்ரி 56 பந்துகளில் 90 ரன்களும், டேனி வியாட்-ஹாட்ஜ் 41 பந்துகளில் 57 ரன்களும் குவித்தனர்.

Ellyse Perry
Ellyse Perry

பின்னர், 181 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கிக் களமிறங்கிய உத்தரப்பிரதேச அணியில் ரன்கள் ஒருபக்கம் வந்தாலும் விக்கெட்டுகளும் சரிந்துகொண்டே இருந்தது. 19 ஓவர்களில 9 விக்கெட்டுகளை இழந்துவிட்ட உத்தரப்பிரதேச அணி, கடைசி 6 பந்துகளில் 18 ரன்கள் அடித்தல் வெற்றி என்ற இக்கட்டான நிலைக்குள்ளானது.

எளிதில் வெற்றிபெற்றுவிடலாம் என்று பெங்களூரு ரசிகர்கள் நம்பிக்கை கொண்டிருக்க, ஆட்டத்தின் கடைசி ஓவரை வீசவந்தார் ரேணுகா சிங். அப்போது கிரீஸில் இருந்த உத்தரப்பிரதேச வீராங்கனை எக்லெஸ்டோன், முதல் பால் டாட் ஆனபோதும் அடுத்த மூன்று பந்துகளில் 6, 6, 4 என அதிரடி காட்டி 16 ரன்கள் எடுத்து வெற்றிக்கு மிக அருகில் நெருங்கினார். ஐந்தாவது பந்தில் எக்லெஸ்டோன் ஒரு எடுக்க கிராந்தி கவுட் ஸ்ட்ரைக்குக்கு வந்தார்.

ஒரு பந்துக்கு ஒரு ரன்… உத்தரப்பிரதேசம் எளிதாக வெற்றிபெறப்போகிறது என்று எல்லோரும் நினைத்துக்கொண்டிருந்தனர். அந்த சமயத்தில்தான், 2016 டி20 உலகக் கோப்பையில் செமி பைனலுக்கு செல்வதற்கான முக்கியமான ஆட்டத்தில், கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்தால் பங்களாதேஷ் வெற்றி என்ற பரப்பான சூழலில், முஸ்தாபிசூர் ரகுமானை தோனி ரன் அவுட் செய்து இந்திய அணியை வெற்றிபெற வைத்தது போல, இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணியின் விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ், எக்லெஸ்டோனை ரன் அவுட் செய்து போட்டியை டிரா செய்தார்.

WPL
WPL – கடைசி பந்தில் ரன் அவுட் செய்த ரிச்சா கோஷ்

இதன் மூலம், WPL வரலாற்றில் முதல் சூப்பர் ஓவரில் இவ்விரு அணிகளும் மோதின. இப்போட்டியில், 4 ஓவர்களில் 40 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்திய கிம் கார்த் கைகளில் பந்தைக் கொடுத்து சூப்பர் ஓவரை வீசச் சொன்னார் பெங்களூரு கேப்டன் ஸ்மிருதி மந்தனா. கிம் கார்த்தை எதிர்கொள்ள உத்தப்பிரதேச அணியில் கிரேஸ் ஹாரிஸ், சினெல்லே ஹென்றி ஆகியோர் பேட்டிங் இறங்கினர்.

சூப்பர் ஓவரில் முதல் இரண்டு பந்துகளில் சினெல்லே ஹென்றி 4 ரன்கள் எடுக்க மூன்றாவது பந்தில் வைடு போட்டார் கிம் கார்த். பின்னர், திரும்ப வீசிய அந்த பந்திலேயே அவரை விக்கெட் எடுத்த கிம் கார்த், அடுத்த மூன்று பந்துகளில் ஒரு வைடு உட்பட மூன்று ரன்கள் கொடுத்து, சூப்பர் ஓவரில் மொத்தமாக 8 ரன்களைக் கொடுத்தார். அதைத்தொடர்ந்து, 9 ரன்கள் எடுத்தால் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களுரு கேப்டன் ஸ்மிருதி மந்தனாவும், ரிச்சா கோஷும் களமிறங்க, உத்தரப்பிரதேச வீராங்கனை எக்லெஸ்டோன் சூப்பர் ஓவர் வீச வந்தார்.

முதல் ஐந்து பந்துகளில் 0, 1, 0, 1, 1 என வெறும் மூன்று ரன்கள் மட்டுமே பெங்களூரு எடுத்தது. கடைசி பந்தில் வெற்றிக்கு சிக்ஸ் அடிக்க வேண்டிய சூழலில் ஸ்மிருதி மந்தனாவால் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், 4 ரன்கள் வித்தியாசத்தில் உத்தரப்பிரதேசம் வெற்றிபெற்றது. ஆட்டநாயகியாக எக்லெஸ்டோன் விருதுபெற்றார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com