மாநில அரசின் துறைகள் அனைத்திலும் தணிக்கை மேற்கொள்ள தங்களுக்கு அதிகாரமிருப்பதாக அக்கவுன்டன்ட் ஜெனரல் தெரிவித்திருக்கிற நிலையில், அறநிலையத்துறை அதற்கு ஒத்துழைக்க மறுப்பது குறித்து அந்தத் துறையின் அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். பெயர் குறிப்பிட விரும்பாத அவர்கள் கூறுவது இதுதான்..
“கோயில்களுக்கு மன்னர்கள் காலத்துல இருந்து நிறைய சொத்துகள், நிலங்கள்னு இருக்கு. தவிர உண்டியல், டொனேஷன்னு பக்தர்கள்கிட்ட இருந்தும் லட்சக்கணக்குல பணம் வருது, இந்தத் தொகைகள் முறையா கையாளப்படுதான்னு கண்காணிக்க ஆட்கள் வேணும்னுதான் அந்த அறநிலையத்துறை உருவாக்கப்பட்டுச்சு.
சொல்லப் போனா அறநிலையத்துறை பணியாளர்களின் ஊதியமே கோயில் பணத்துல இருந்துதான் கொடுக்கப்படுது. இந்தியத் தணிக்கைத் துறையைப் பொறுத்தவரை மக்கள்கிட்ட இருந்து வரி முதலான வருவாய் அரசுக்கு வர்றதை ஆய்வு செய்ய அதிகாரமிருக்கு. எந்தெந்த துறைகள்ல மக்கள் பணம் போகுதோ அந்தத் துறைகளை ஆய்வு செய்யலாம்.
கோவில்களுக்கு வர்ற பணம் மக்கள் விருப்பப்பட்டு, ஒரு நம்பிக்கையில கொடுக்கிறது. இது அரசுக்குத் தர்ற பணம் ஆகாது. அதனாலதான் இந்தியத் தணிக்கைத் துறையின் ஆய்வு வரம்புக்குள் இந்தத் துறை வராதுனு சொல்றாங்க.
அதேநேரம், அறநிலையத்துறைக்குள்ளேயே ஒரு ஆடிட் விங் இருக்கு. அது கோயில்களின் சொத்துகள், நன்கொடை, உண்டியல் பணம் எல்லாத்தையும் ஆய்வு செய்து துறைக்கு உரிய அறிக்கையை அனுப்பிட்டுதான் இருக்காங்க’’. என்றனர்.