‘ரோஹித்துக்கு வயதாகி விட்டது அவர் ஓய்வு பெறலாம்’ – ஸ்ரீகாந்த் ஓபன் டாக் | it is time to retire Rohit says Srikanth who points age factor

Share

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா தோல்வியடைந்தால் அவர் ஓய்வு பெறுவது நல்லது, அவருக்கும் வயதாகி விட்டது என்று முன்னாள் இந்திய கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு கோலி, ரோஹித் சர்மா, ஜடேஜா ஆகியோர் மனது வந்து ஓய்வு அறிவித்தனர். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்போதுமே இந்திய கிரிக்கெட்டின் சாபக்கேடு அவ்வளவு சுலபமாக, ராகுல் திராவிட் நீங்கலாக யாரும் ஓய்வு முடிவு எடுக்கவில்லை என்றுதான் கூற வேண்டியுள்ளது.

ரோஹித் சர்மாவின் கேப்டன்சி எதிர்மறையாக, தற்காப்பு உத்தியுடன் இருக்கிறது, அட்டாக்கிங் ஆக இல்லை என்ற விமர்சனங்களை வர்ணனையில் ரவி சாஸ்திரி, சஞ்சய் மஞ்ச்ரேக்கர், கவாஸ்கர் உள்ளிட்டோர் வைத்தனர். பேட்டிங்கில் ‘லேசி எலிகன்ஸ்’ என்று கூறப்படும் ரோஹித் சர்மா அலட்சியமாக ஆட்டமிழந்து இந்திய அணியை 3-0 என்ற முற்றொழிப்பு தோல்விக்கு இட்டுச் சென்றது ரசிகர்கள் மத்தியில் கடும் ஆவேசங்களை கிளப்பியுள்ளது.

இந்நிலையில் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறும்போது, “முன்னோக்கிச் சிந்திக்க வேண்டும். ரோஹித் சர்மா நன்றாக ஆடவில்லை எனில் அவர் ஓய்வு பெறுவது நல்லது. அவர் ஒரு நாள் கிரிக்கெட்டில் ஆடுவார். ரோஹித் சர்மாவுக்கு வயதாகி வருகிறது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

ஆனால் தான் தொடர் முழுதும் மோசமாக ஆடியதாகவும் மோசமாக கேப்டன்சி செய்ததாகவும் ரோஹித் சர்மாவே ஒப்புக்கொண்டதற்காக அவருக்கு ஹேட்ஸ்-ஆஃப். இப்படி ஒப்புக்கொள்ளுதல்தான் ஒரு வீரர் தன்னுடைய ரிதமுக்குத் திரும்புவதன் முதல் படி.

நம் தவறுகளை ஒப்புக் கொள்வது முக்கியமானது. மனிதர்களுக்கு மிகவும் அவசியமான ஒரு குணம் ஆகும் அது. ரோஹித் சர்மா வெளிப்படையாக தன் குறைகளை ஒப்புக் கொண்டுள்ளார். இது அவர் தன்னை மீட்டெடுப்பதற்கான பாதையில் செல்லப் போகிறார் என்று அர்த்தம். இது என்னுடைய கருத்து.” இவ்வாறு கூறினார் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்.

கம்பீரின் கோரிக்கை மீது பிசிசிஐ அதிருப்தி: இங்கிலாந்து தொடருக்கு எதிராக 4-1 என்று நல்ல இருதரப்புக்குமான பிட்சில் வென்ற பிறகே இனி குழிப்பிட்ச்கள் கிடையாது என்ற பிசிசிஐ-யின் நிலைப்பாட்டை மீறி நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பெங்களூரு டெஸ்ட் போட்டியில் தோற்ற பிறகு அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளுக்கு ‘ரேங்க் டர்னர்’ (குழிப்பிட்சை மங்களகரமாக இப்படித்தான் ஆங்கிலத்தில் கூறுவார்கள்) பிட்ச் கேட்டதாக புகார்கள் எழுந்ததையடுத்து கம்பீர் பிசிசிஐ-யிடம் விளக்கம் கூற அழைக்கப்படுவார் என்று ஆங்கில ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டுள்ளன.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com