தனித்து வாழ்பவர்களின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த விவேக் மூர்த்தி என்ற மருத்துவர் தனிமை பற்றி சமர்ப்பித்த தனது அறிக்கையில், “தனிமை என்பது மோசமான ஓர் உணர்வு. அது தனிப்பட்ட மற்றும் சமூக ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கிறது. இதயநோய், டிமென்ஷியா, பக்கவாதம், மனச்சோர்வு, பதற்றம் ஆகியவற்றுடன் தொடர்புடையது.
ஒரு நாளைக்கு 15 சிகரெட்டுகள் புகைப்பதால் ஏற்படும் பாதிப்பைவிட மோசமான பாதிப்பை தனிமை உருவாக்குகிறது. இது உலகளாவிய அச்சுறுத்தலாக உருமாறி வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
இதுபற்றி பேசியுள்ள உலக சுகாதார நிறுவனத்தின் டைரக்டர் ஜெனரல் மருத்துவர் டெட்ராஸ் அதானோம், “உலகம் முழுவதும் தனிமை என்பது உடல்நலம் மற்றும் நல்வாழ்வுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. போதுமான சமூக தொடர்புகள் இல்லாதவர்கள் மனச்சோர்வு, தற்கொலை எண்ணம் போன்ற ஆபத்துகளில் உள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.