பழைய திரைப்படங்களில், மனநலம் பாதிக்கப்பட்ட ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ “திருமணம் செய்துவைத்தால் எல்லாம் சரியாகி விடும்’ என்று வீட்டின் பெரியவர்கள் சொல்வதுபோல காட்சிகள் வரும். அவை நிஜத்திலும் நடக்கின்றன… அதுவும், இந்தக் காலத்திலும் நடக்கின்றன என்கிற செக்ஸாலஜிஸ்ட் காமராஜ், அது தொடர்பான கேஸ் ஹிஸ்டரியை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.
”சோகமாக இருந்த ஓர் இளைஞரை அரவணைத்தபடி ஒரு குடும்பம் என்னை சந்திக்க வந்தது. அந்த இளைஞனுக்கு சில தினங்களுக்கு முன்னால்தான் திருமணம் நடந்திருந்தது. பெற்றோர்கள் பார்த்து செய்து வைத்த திருமணம். ‘பொண்ணு ரொம்ப அழகா இருக்கா’ என்ற மகிழ்ச்சியுடன் திருமணத்தை நடத்தியிருக்கிறார்கள். அந்தப் பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர். இது மாப்பிள்ளைக்கும் அவருடைய குடும்பத்துக்கும் திருமண நாள் வரை தெரியாமல் இருப்பதற்காக, ‘பொண்ணு ரொம்ப கூச்ச சுபாவி. அதனால, அவளுக்கு ஃபிரெண்ட்ஸ்கூட கிடையாது. ஆம்பளைப் பசங்களை திரும்பிக்கூட பார்க்க மாட்டா’ என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்கள். மாப்பிள்ளை வீட்டாரும் ‘பொண்ணை எவ்ளோ அடக்க ஒடுக்கமா வளர்த்திருக்காங்க ‘ என்று நம்பி, திருமணம் செய்து தங்கள் வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார்கள்.
முதலிரவு…. மாப்பிள்ளை ஆசை ஆசையாக மனைவியின் அருகே சென்றிருக்கிறார். அந்தப் பெண் ஒன்றும் புரியாமல் மலங்க மலங்க விழித்திருக்கிறார். கணவர் கை மேலே பட்டவுடன் கெட்ட வார்த்தைகளால் திட்ட ஆரம்பித்திருக்கிறார். கணவர் மிரண்டு போய் மனைவியைப் பார்க்க, ‘தப்பு பண்ணப் பார்க்கிறியா… வெளியே போடா ………..’ என மறுபடியும் தகாத வார்த்தைகளால் திட்ட ஆரம்பித்திருக்கிறார். வேறு வழியில்லாமல் மாப்பிள்ளை அறையை விட்டு வெளியேற, அந்தப் பெண் கெட்ட வார்த்தைகள் சொல்லி மாப்பிள்ளையைத் திட்டுவதை, வீட்டிலிருந்த அத்தனை உறவினர்களும் கேட்டிருக்கிறார்கள். மாப்பிள்ளை கூனிக் குறுகிப் போயிருக்கிறார்.