ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் கீழ் பவானி வாய்க்காலின் கான்கிரீட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளுக்கு ஆதரவாக கடந்த மாதம் 29ம் தேதி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்த இருந்தனர். ஆனால், அந்த போராட்டத்தை கட்சியின் தலைமை தற்காலிகமாக ரத்து செய்வதாக அறிவித்தது. இதனால், ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் அதிருப்தி அடைந்தனர். இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபியை சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் நித்தியானந்த், ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் லோகுபிரகாசு, மேற்கு மாவட்ட செயலாளர் தாமோதரன், வடக்கு மாவட்ட செயலாளர் அப்புசாமி, தெற்கு மாவட்ட செயலாளர் சந்திரகுமார், வடக்கு மாவட்ட தலைவர் சிவக்குமார் போன்ற முக்கிய நிர்வாகிகள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் நாம் தமிழர் கட்சியின் பொறுப்புகளில் இருந்தும், உறுப்பினர்கள் பதவியில் இருந்தும் தங்களை விலக்கி கொண்டனர்.