பன்றியின் சிறுநீரகத்தில் மரபணு ரீதியாக சில மாற்றங்களைச் செய்தே NYU Langone மருத்துவ மையத்தில் மில்லருக்குப் பொருத்தினார்கள். அதன் செயல்பாடு மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது.
இந்த ஆய்வுகள் ஒரு பக்கம் இருக்க, சீனாவில் உல்டாவாக வேறொரு ஆராய்ச்சியைச் செய்திருக்கிறார்கள். ‘பன்றிகளின் உடல் உறுப்புகளை எதற்கு எடுத்து மனிதர்களுக்குப் பொருத்த வேண்டும்? பன்றிகளின் உடலிலேயே மனித உறுப்புகளை வளரச் செய்து, அவற்றை எடுத்துப் பயன்படுத்தினால் என்ன?’ என்பதுதான் இந்த ஆராய்ச்சிக்கு அடிப்படை. சீனாவின் Guangzhou Institutes of Biomedicine and Health ஆராய்ச்சியாளர்கள் இதைச் சாதித்திருக்கிறார்கள். பன்றியின் உடலில் மனித சிறுநீரகத்தை வளரச் செய்து அவர்கள் நடத்திய ஆராய்ச்சி வெற்றியடைந்துள்ளது.
மிகவும் நுணுக்கமான ஆராய்ச்சி இது. பன்றியின் கருமுட்டையை எடுத்து, அதில் சிறுநீரகத்தை உருவாக்குவதற்கான மரபணுக்களை நீக்கிவிட்டனர். அதற்குப் பதிலாக, மனிதர்களின் சிறுநீரகத்தை உருவாக்கும் ஸ்டெம் செல்களை அதில் இணைத்தனர். 13 பெண் பன்றிகளுக்கு இந்த ஹைப்ரிட் கருமுட்டைகள் பொருத்தப்பட்டு ஆய்வுகள் நடைபெற்றன. 28 நாள்கள் வளர்ச்சியடைந்த பிறகு, இந்தப் பன்றிக் கருக்களை அகற்றி பரிசோதனை செய்தனர். 50% அளவுக்கு மனித செல்களைக் கொண்ட சிறுநீரகங்கள் இந்தக் கருக்களில் வளர்ந்திருந்தன.