இது தொடர்பாக சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலு வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், “புதுவை சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின்கீழ் இயங்கும் தேசிய கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் நோய் தடுப்புத் திட்டம் மூலம் மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா, ஜப்பானிய மூளைக்காய்ச்சல் மற்றும் யானைக்கால் போன்ற நோய்கள் பரவாமல் தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நல சேவைகள் அமைச்சகத்தின் பரிந்துரையுடன் ஒவ்வோர் ஆண்டும் பருவமழை சீசன் துவங்குவதற்கு முன்னர் மற்றும் பின்னர் நாட்டில் நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதன் மூலம் இந்த நோய்கள் வராமலும், பரவாமலும் தடுக்கலாம். இந்த நோய்களைக் கட்டுப்படுத்த சுகாதாரத்துறை மிகவும் கடுமையாகப் போராடி வருகிறது.
நேற்று புதுச்சேரி தருமாபுரியைச் சேர்ந்த மீனா ரோஷினி என்ற பெண் டெங்குவால் உயிரிழந்ததாக இயக்குநர் அலுவலகத்துக்குத் தகவல் கிடைத்தவுடன், உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது.
அந்தக் குழுவின் அறிக்கையின்படி அந்தப் பெண் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக 04.09.2023 அன்று அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக 08.09.2023 அன்று கோரிமேடு ஜிப்மர் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டு, அன்றே ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தொடர் சிகிச்சை அளித்தும் பலனின்றி 12.09.2023 மரணமடைந்தார்.
அதேபோல குருமாம்பேட்டையைச் சேர்ந்த 19 வயதுப் பெண் காயத்ரி 10.09.2023 அன்று காய்ச்சலுக்காக தனியார் மருத்துவரிடம் சிகிச்சைப் பெற்று, மேல்சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்குப் பரிந்துரைக்கப்பட்டு சேர்க்கப்பட்டார். தொடர் சிகிச்சை பலனின்றி 13.09.2023 அன்று அவர் மரணமடைந்தார்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.