நான், 2017 ல் சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு முழு உடல் பரிசோதனைக்குச் சென்றேன். அதற்கு முன்வரை, எனக்கு எந்த வியாதியும் இல்லை. என்னைப் பரிசோதித்த டாக்டர், `உங்களுக்கு ஹெர்னியா இருக்கிறது” என்றார். `எனக்கு எந்த அறிகுறியும் இல்லையே’ என்று கேட்டதற்கு, `அறிகுறி இருக்கிறது, ஒரு மாதத்தில் ஆபரேஷன் செய்து கொள்ளுங்கள்’ என்று கார்டு கொடுத்து அனுப்பி வைத்தார்.
ஆனால், இன்றுவரை அதற்கான அறிகுறி இல்லை. நோயில்லாமல் சென்ற நான், சர்க்கரை நோயாளியாக வியாதியுடன் திரும்பினேன். சொந்தச் செலவில் சூனியம் என்பார்களே.. அதேபோல எனக்கு 2019-ல் நெஞ்சுவலி ஏற்பட்டு, அதே மருத்துவமனையில் பரிசோதித்தேன். எனக்கு இரண்டு பிளாக் உள்ளது என்று கூறி, மூன்று லட்சம் ரூபாய்க்கு எனக்கு 2 ஸ்டென்ட் வைத்தனர்.
எனக்கு, இரண்டு வருடங்களில் மீண்டும் வலி ஏற்படவே, அதே மருத்துவமனையில் மீண்டும் ஆஞ்சியோ செய்தேன். `ஒரு ஸ்டென்ட் நூறு சதவிகிதம் நன்றாக உள்ளது. இன்னொன்று, நூறு சதவிகிதம் அடைப்பு ஏற்பட்டுள்ளது. ஆஞ்சியோ பிளாஸ்டி செய்ய வேண்டும்’ எனக்கூறி, மூன்றரை லட்சம் ரூபாய் ஆகும் என்றனர். நானும், எனக்கு அரசு காப்பீடு உள்ளது என்று கூறியபோது, `இங்கு அரசு காப்பீடு ஏற்றுக் கொள்ள மாட்டோம்’ என்றனர். மற்றொரு டாக்டரிடம் ஆலோசனை கேட்டேன். அவரோ `இது தேவையில்லை. நன்றாக உள்ள ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட வாய்ப்புண்டு. மருந்திலேயே இதை குணப்படுத்தி விடலாம்’ என்றார்.