`பச்சிளம் குழந்தை வளர்ப்பு’ என்பது, பெற்றோருக்கு சவால் நிறைந்தது மட்டுமல்ல, பல்வேறு கேள்விகளும் நிறைந்தது. பெற்றோரின் கேள்விகள் கொண்டு ‘பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்’ ஒவ்வொன்றையும் வாரம் ஒன்றாக, மருத்துவ நுணுக்கங்களைக் கொண்டு, எளிதில் விளங்கும் வண்ணம், விரிவாக விளக்குவதே இந்த மருத்துவத் தொடரின் நோக்கம்.
புதுச்சேரி, ஸ்ரீ லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி குழந்தைகள் நல மருத்துவரான மு. ஜெயராஜ் MD (PGIMER, Chandigarh), இத்தொடரின் மூலம் உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் தருகிறார்.
இந்த வார அத்தியாயத்துடன் ‘பச்சிளம் குழந்தை பராமரிப்பு’ மருத்துவத் தொடர் நிறைவடைகிறது. இந்த இறுதி அத்தியாயத்தில், பச்சிளம் குழந்தைகளை பாதிக்கும் நோய்த்தொற்று மற்றும் மூச்சுத்திணறல் குறித்து விரிவாகக் காண்போம்.
பச்சிளம் குழந்தைகளை பாதிக்கும் நோய்த்தொற்று
பச்சிளம் குழந்தைகளில் நோய் எதிர்ப்பு சக்தி மண்டலம் போதுமான வளர்ச்சி அடைந்திராத காரணத்தினால், நோய்த்தொற்று ஏற்படவும் அதனால் தீவிர பாதிப்புகள் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகரிக்கும். பச்சிளம் குழந்தைகளில் ஏற்படும் நோய்த்தொற்றை Neonatal Sepsis என்போம்.
ரத்தத்தில் நோய்த்தொற்று, மூளைக்காய்ச்சல், நிமோனியா, எலும்பு அழற்சி மற்றும் சிறுநீர்ப்பாதைத் தொற்று ஆகியன பச்சிளம் குழந்தைகளை பாதிக்கும் செப்சிஸ் நோய்த்தொற்றுகள். செப்சிஸால், அதிகளவு பச்சிளம் குழந்தைகள் மரணங்கள் நிகழ்கின்றன. 14% பச்சிளம் குழந்தைகளுக்கு செப்சிஸ் நோய்த்தொற்று ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.