பொதுவாகவே நாம் உட்கொள்ளும் புரதம், உடலிலேயே தங்கிவிடும். சிறுநீர் வழியாக வெளியேறாது. சிறுநீரக செல்கள் சேதமடைவதன் விளைவாக மைக்ரோ அளவில் புரதம் சிறுநீரகத்தின் வழியே வெளியேறும். இதனை மைக்ரோ ஆல்பமின் (Micro albumin) என்று சொல்வோம். இந்தப் பிரச்னையை கண்டுகொள்ளாமல்விட்டால் நாளடைவில் மேக்ரோ அளவில் புரதம் வெளியேற ஆரம்பித்துவிடும். அப்படி ஆன நிலையில் வரும் நோயாளிகள், சிறுநீர் நுரைநுரையாக வெளியேறுகிறது என்பார்கள். சிறுநீரின் வழியே புரதம் வெளியேறுவதுதான் இதற்குக் காரணம். இது நீடிக்கையில் சிறுநீரக செல்கள் முழுவதும் சேதமடைந்து சிறுநீரக செயலிழப்பு ஏற்படும் அபாயம் இருக்கிறது.
அடிக்கடி சிறுநீர் வருவது, அதிக அளவில் சிறுநீர் வெளியேறுவது போன்ற அறிகுறிகள் தென்படும்போதே, ரத்த சர்க்கரை அளவைப் பரிசோதிக்க வேண்டும். நீரிழிவு இருப்பதைக் கண்டறிந்து விட்டால், உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை மாற்றத்தின் வழியாக சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம். இதனால் சிறுநீரக செல்கள் பாதிக்கும் அபாயம் தவிர்க்கப்படும்.
உயர் ரத்த அழுத்தம் இருக்கிறது என்றால், மாத்திரைகள் வழியாகவும் உடற்பயிற்சிகள் வழியாகவும் அதனைக் குறைப்பதில் தீவிரம் காட்ட வேண்டும். உணவில் உப்பு அதிகம் சேர்த்துக் கொள்ளாமல் இருக்க வேண்டும்.
இதைக் கடந்து மரபு ரீதியில் சிறுநீரக பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது. நீரிழிவின் காரணமாக சிறுநீரகம் மட்டுமல்ல இதய பாதிப்புகளும் ஏற்படும் என்பதால் அதிகவனமாக இருக்க வேண்டும்” என்கிறார் டாக்டர் முத்துக்குமரன் ஜெயபால்.