மண் பாத்திரங்களை அதன் மண் வாசனை போகும் வரை மாற்றி மாற்றிக் கழுவியும் ஊறவைத்தும் காயவைத்தும் விட்டு பிறகு சில நாட்கள் சமைத்த உணவுகளை அதில் வைத்துப் பயன்படுத்திப் பழக்குங்கள். கொஞ்சம் கொஞ்சமாகப் பழகும்..பிறகு உங்கள் இஷ்டம் தான்..ஜமாய்க்கலாம்… வாங்கியவுடன் சமைக்க ஆரம்பித்தால் உணவில் அதன் வாசனையும் வரும். அடியிலும் ஒட்டும். தினம் ஒரு முறை சுத்தம் செய்து சில நாட்கள் தண்ணீர் வைத்துக் குடிக்கலாம்.
பலருக்கும் இவை கீழே போட்டால் உடைந்து போகும் என்ற பயமே.. உடையும் பொருட்கள் நாம் வாங்குவதே இல்லையா? பயன் படுத்தும் மொபைலில் இருந்து கண்ணாடி ஜன்னல்கள் கதவுகள் அலங்காரப் பொருட்கள் என்று எத்தனை எத்தனை… அவற்றை ஒப்பிடுகையில் இது ஒன்றுமே இல்லை…..ஆரோக்கியத்தைப் பாதுகாக்கப் பல வழிகளில் மெனக்கிட வேண்டியுள்ளதே. கல் மண் சட்டிகளில் முக்கால் பதம் வெந்ததும் அந்தச் சூட்டில் பொங்கி விடாமல் சற்று ஆவி போனதும் காற்றுப் புகாமல் மூடி வைத்து கல் மாதிரி வெயிட் வைத்து விட்டால் எரி பொருளும் மிச்சமாகும். உணவும் பதமாக வெந்திருக்கும். கொஞ்சம் பழக்கத்துக்கு வர வேண்டும்.அவ்வளவு தான். பிறகு எல்லா விதமான உணவு வகைகளையும் எளிதாகச் சமைக்கலாம்.
சமையலுக்கு என்று கிடைக்கும் தரமான வெள்ளைப் பீங்கான் பாத்திரங்கள் ஒட்டாமல் குழம்பு கூட்டு போன்ற நீர் சேர்த்துச் சமைக்க எளிதானவை. அவற்றை வாணலி போன்று வறுக்கப் பயன் படுத்தினால் நீண்ட நாள் பயன்பாட்டுக்கு வராது.
உடல்நலம் பேண எத்தனையோ கஷ்டப் படுகிறோம் இக்காலத்தில். இஷ்டப்பட்டு இந்த முயற்சியையும் செய்து பார்க்கலாமே.
மீனாக்ஷி மோஹன்
ஹைதராபாத்