விநோத நோயான ஹவானா சிண்ட்ரோம் இந்தியாவில் பரவுவதற்கான வாய்ப்புள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று, நீதிமன்றத்தில் மத்திய அரசு பதிலளித்துள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த அமர்நாத் சாகு என்பவர், பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் சில தினங்களுக்கு முன்பு ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், இந்தியாவில் ‘ஹவானா சிண்ட்ரோம்’ (Havana Syndrome) பரவியுள்ளதா என்று கண்டறிய வேண்டும். மேலும் இந்தியாவில் அது பரவுவதையும் தடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

2021-ம் ஆண்டு, அமெரிக்க உளவுத்துறை அதிகாரி ஒருவர், மத்திய உளவுத்துறை ஏஜென்சியின் இயக்குநர் வில்லியம் பேர்ன்ஸ் உடன் டெல்லிக்கு பயணப்பட்டார். அப்போது அவருக்கு இந்தப் பிரச்னையின் அறிகுறிகள் இருந்ததாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு மத்திய அரசின் சார்பில் பதில் அளிக்கப்பட்டது. அதில் இந்தியாவில் ஹவானா சிண்ட்ரோம் பரவுவதற்கான வாய்ப்புள்ளதா என்று விசாரணை நடத்தவுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதென்ன ஹவானா சிண்ட்ரோம்?
கியூபா நாட்டின் மிகப்பெரிய நகரம் மற்றும் அந்நாட்டின் தலைநகர்தான் ஹவானா. 2016-ம் ஆண்டு கியூபாவின் ஹவானா நகரில் தங்கியிருந்த அமெரிக்க அதிகாரிகள் அனைவரும், தொடர்ந்து உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்டுக்கொண்டே வந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தாங்கள் தங்கியிருக்கும் ஹோட்டல் அறைகள், வீடுகளில் விநோதமான சத்தங்களும், உடலில் வித்தியாசமான உணர்வுகளும் (Sensation) ஏற்படுவதாகத் தெரிவித்தனர்.
மேலும் வாந்தி வருவது போன்ற உணர்வு, அதீத தலைவலி, சோர்வு, தூக்கப் பிரச்னைகள், கேட்கும் திறன் பாதிப்பு போன்றவை ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர். அதனால் இந்த விநோதமான உடல்நலக் குறைபாட்டுக்கு `ஹவானா சிண்ட்ரோம்’ என்ற பெயரே வந்தது. அந்தச் சமயத்தில் 200-க்கும் மேற்பட்ட அமெரிக்க அதிகாரிகள் இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டனர்.

உளவியல் சார்ந்த உடல்நலக்குறைவு
அமெரிக்க அதிகாரிகள் மட்டுமன்றி, ஹவானாவில் வசித்த கனட நாட்டினருக்கும் இந்த பாதிப்பு ஏற்பட்டது. கியூபா மட்டுமன்றி பல நாடுகளில் பணியாற்றும் அமெரிக்க அதிகாரிகளிடம் மட்டும் இந்தப் பிரச்னை ஏற்பட்டது. இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர், அறிகுறிகளிலிருந்து மீண்டு குணமாகினர். ஆனால் சிலரால் தொடர்ந்து தங்கள் பணிகளுக்குத் திரும்ப முடியாத அளவுக்கு பாதிப்பு தொடர்ந்தது.
கியூபா அரசோ, இந்தப் பிரச்னை பற்றி தங்களுக்கு எந்தத் தகவலும் தெரியாது என்று மறுத்தது. தங்கள் நாட்டு அதிகாரிகளுக்குத் தொந்தரவு கொடுக்கும் வகையில் இந்தப் பிரச்னை வேண்டுமென்றே உருவாக்கப்பட்டிருக்கலாம் என அமெரிக்கா கருதியது. சில ஆண்டுகளாகத் தொடர்ந்து அமெரிக்காவின் ராணுவம், மருத்துவத் துறை எனப் பல்வேறு துறை சார்ந்தவர்கள் விசாரணை நடத்தினர். இதன் முடிவில், வெளிநாட்டுச் சூழலில் அதிக மனஅழுத்தத்துடன் வேலை பார்த்ததால் ஏற்பட்ட உளவியல் சார்ந்த உடல்நலக் குறைவு என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
திட்டமிடப்பட்டு பரப்பப்பட்டதா ஹவானா?
இதனையடுத்து 2020-ம் ஆண்டு அங்கு ஆய்வு மேற்கொண்ட அமெரிக்க தேசிய அறிவியல் அகடமி, “இயற்கையாக இது ஏற்படவில்லை. திட்டமிடப்பட்ட ஆற்றல் மூலம் ஏற்பட்ட ரேடியோ அதிர்வெண்தான், ஹவானா சிண்ட்ரோம் பிரச்னைக்கான நம்பத்தகுந்த காரணம்” என்று தெரிவித்தது. மேலும் செல்போன் பயன்பாடு போன்ற பொதுவான காரணங்களாலும் இந்த ஆற்றல் ஏற்படவில்லை.
காரணம், இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களிடம் நடத்திய ஆய்வில் அவர்கள் தங்கியிருந்த இடத்தில் அல்லது அறையில் குறிப்பிட்ட திசையிலிருந்துதான் அந்த விநோதமான சத்தம் வந்துள்ளது. மேலும் இந்தப் பிரச்னைக்கான பிற காரணங்களையும் ஒட்டுமொத்தமாக புறம்தள்ளிவிட முடியாது என்று தெரிவித்துள்ளது.

அதோடு நிறுத்தாமல், எதிர்காலத்தில் இதுபோன்ற புதிய பிரச்னைகள் ஏற்படலாம். அவ்வாறு ஏற்படும் பிரச்னைகளை உடனுக்குடன் கண்டறிவதும் கடினமாக இருக்கலாம். எனவே, புதிய மற்றும் தெரியாத அச்சுறுத்தல்கள் வெளிநாடுகளில் பணியாற்றும் அமெரிக்க அதிகாரிகளின் உடல்நலம் மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதைத் தடுக்க அமெரிக்க அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது.
இத்தகைய பின்னணி கொண்ட ஹவானா சிண்ட்ரோம், இந்தியாவில் பரவியுள்ளதா என ஆய்வு நடத்த வேண்டுமென்ற மனு பெங்களூரு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவே, மீண்டும் பேசுபொருளாகி இருக்கிறது இந்த விவகாரம்.