குழந்தை படுக்க வைக்கப்படும் மெத்தை, குழந்தை வளர்க்கப்படும் சூழல், சுவாசிக்கும் காற்றின் தன்மை, குடும்பத்தார் பயன்படுத்தும் வாசனைத் திரவியங்கள், கொசுவத்திப்புகை எனப் பல்வேறு காரணங்கள் சில நேரங்களில் சற்றும் எதிர்பார்க்காத வகையில் குழந்தை உயிரிழக்கக் காரணமாகலாம்.
மிருதுவான மெத்தையில் படுக்க வைக்கும்போது, குழந்தை குப்புற விழுந்தால் மூச்சுத்திணறல் ஏற்படும் சாத்தியங்கள் உள்ளன. இவை மரணத்திலும் முடியலாம்.
தாய்ப்பால் கொடுப்பதால் SIDS மரணங்களைக் குறைக்க முடியுமா?
தாய்ப்பால் கொடுப்பதால் நிச்சயமாக இவ்வகை மரணங்களைக் கட்டுப்படுத்த முடியும். ஏனெனில், தாய்ப்பால் புகட்டும்போது, குழந்தைகளின் வாய், தொண்டை, நாக்கு போன்றவை அசைகின்றன, தானாகப் பயிற்சி பெறுகின்றன. இது குழந்தைகளுக்கு ஓர் எதிர்ப்பாற்றலை வழங்குகிறது. மூச்சுத்திணறலால் ஏற்படும் மரணங்களைத் தவிர்க்க உதவுகிறது.
மேலும், கிருமிகளால் நோய்த்தொற்று ஏற்படுவதையும், வேறு உணவு சார்ந்து நோய் ஏற்படுவதையும் தாய்ப்பால் தரும் எதிர்ப்புசக்தி தடுக்கிறது. தாய்ப்பால் புகட்டப்பட்டு வளர்க்கப்படும் சிசுக்களுக்கு காய்ச்சல், சளி போன்றவையும் குறைவாகவே ஏற்படும்.