`புகைபிடிப்பது உயிருக்கு ஆபத்து’ என்று சொன்னாலும், `ஆமா புகைபிடிக்காதவன் எத்தனையோ பேரு எப்படி எப்படியோ சாகுறாங்க. இதனால ஒன்னும் ஆகப் போறதில்லை’ என அசால்டாக புகைபிடிப்பவர்கள் அநேகம். புகையிலை பொருள்களின் விற்பனையும் குறையப்போவதில்லை, புகைபிடிப்பவர்கள் அதை நிறுத்தவும் போவதில்லை என்பது அனைவரும் அறிந்ததே. அதற்காக அதை அப்படியே விட்டுவிடவும் முடியாது. முடிந்தளவுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டிருக்க வேண்டும்.

இந்நிலையில், ஹாங்காங் நகரில் புகைபிடிக்காத கலாசாரத்தை உருவாக்க, அந்நாட்டு அரசு முனைந்து வருகிறது. ஹாங்காங்கின் சுகாதார செயலாளர் லோ சுங் – மாவ் புகையிலை எதிர்ப்பு நடவடிக்கைகளைக் கடுமையாக்கி வருகிறார். உணவகம், பணியிடங்கள், பொதுமக்கள் கூடும் அறைகள் மற்றும் பொதுவெளிகளில் புகைபிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் புகையிலையற்ற நகரத்தை எப்படி உருவாக்குவீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்திருந்த லோ சுங் – மாவ், “புகைபிடித்தல் அனைவரின் ஆரோக்கியத்திற்கும் கேடானது. பொது இடங்களில், புகைபிடிக்கக் கூடாத இடங்களில், யாரவது புகைபிடித்தால், அவர்களை உற்றுப் பாருங்கள். எந்த சட்ட அமலாக்க அதிகாரிகளும் உடனடியாக வர முடியாவிட்டாலும், புகைபிடிப்பவர்களை நாம் உற்று நோக்கலாம்.
ஓர் உணவகத்தில் ஒருவர் சிகரெட்டை வெளியே எடுத்தால், அங்குள்ள அனைவரும் அந்த நபரை உற்றுப் பார்க்கலாம். உணவகத்தில் உள்ள அனைவரும் வெறுமனே உற்றுப் பார்ப்பதால், அவர்களை அடிக்க அவர் துணியமாட்டார்.

அனைவரும் பார்க்கிறார்கள் என்று தெரிந்தால், அவர் புகைபிடிக்க மாட்டார். போலீசார் சம்பவ இடத்திற்கு வரும்போது, குற்றம் ஏற்கெனவே நிறுத்தப்பட்டிருக்கலாம். அதனால் அவர்களால் நடவடிக்கை எடுக்க முடியாது. பொது இடங்களில் புகைபிடிப்பவர்களை பிடிப்பது காவல் துறையினருக்கும் சவாலாகவே உள்ளது.
மக்கள் வரிசையில் நிற்பதற்குச் சட்டம் தேவை என்று யாரும் சொல்ல மாட்டார்கள். பேருந்துகளுக்காகக் காத்திருக்கும்போது வரிசையில் நிற்கும் இந்த விதியை மக்கள் கடைப்பிடிக்கும் கலாசாரத்தை நம் சமூகத்தால் உருவாக்க முடிகிறது. ஒட்டுமொத்த சமுதாயமும் புகைபிடிக்காத கலாசாரத்தை உருவாக்க முடியும் என்று நான் நம்புகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
புகைபிடிப்பதைத் தடுக்க, லோ சுங் மாவ்வின் இந்த அறிவுரை சரியானதா… உங்களின் கருத்தென்ன?