சூயிங்கம் மெல்வது தலைவலியை ஏற்படுத்துமா? மருத்துவ விளக்கம்!

Share

குழந்தைகள் முதல் இளைஞர்கள், பெரியவர்கள் என பலருக்கும் சூயிங்கம் மெல்வது விருப்பமான ஒன்று. வாயில் போட்டதும் சிறிது நேரத்திற்கு மட்டுமே இனிப்புச்சுவை இருக்கும். ஆனாலும், அதன் பிறகும் அதை மெல்வது பலருக்கும் பிடித்ததாக இருக்கிறது. சூயிங்கம் மெல்வது உடல்நலத்துக்கு நல்லதா… இதுகுறித்து, சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் ஹெச். விஷாலிடம் கேட்டோம்….

மருத்துவர் ஹெச். விஷால்

பொதுவாக ஒரு சூயிங்கத்தை 2 முதல் 2 ½ மணி நேரம் வரை மெல்லலாம். ஒருவேளை தவறுதலாக அதை விழுங்கிவிட்டால் கூட, ஒன்று அல்லது இரண்டு நாள்களில், மலம் வழியாக அது வெளியே வந்துவிடும். சூயிங்கமானது, ஜெலட்டினால் ஆனது. சூயிங்கத்தில் சர்க்கரை சேர்த்தது… சர்க்கரை சேர்க்காதது என இரண்டு வகை இருக்கிறது.

முடிந்தவரை சர்க்கரையில்லாத சூயிங்கத்தைப் பயன்படுத்துவதே நல்லது. சர்க்கரை சேர்த்த சூயிங்கத்தை அடிக்கடி மெல்வதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும், பல் சொத்தை உருவாகும்.

குழந்தைகளுக்கு முடிந்தவரை குறைந்தளவில், சர்க்கரையற்ற சூயிங்கத்தையே கொடுக்க வேண்டும். சூயிங்கம் அதிகளவில் மெல்வதால் தலைவலி ஏற்படக்கூடும்.

சூயிங்கம் மெல்லும்போது பலமுறை தாடையை அசைத்துக் கொண்டே இருப்பதால், தாடையில் அதிக வலி ஏற்படும். பின்பு அது தலைவலியை ஏற்படுத்தும்.

ஒற்றைத் தலைவலி

தினமும் நீங்கள் சூயிங்கம் சாப்பிட்டாலோ, அல்லது நீண்ட நேரம் மென்று கொண்டிருந்தாலோ, ‘டெம்போரோமண்டிபுலர் டிஸ்ஆர்டர்’ (Temporomandibular Disorder) என்கிற பிரச்னை ஏற்பட்டு அதன் விளைவாக தலைவலி வரலாம்.

அதேநேரம், தாடை தொடர்ந்து அசைக்கப்படுவதால் காதுவலி வருவதற்கான வாய்ப்பு குறைவதாகச் சொல்லப்படுகிறது. குறிப்பாக மலைப்பாங்கான இடங்களுக்குச் செல்லும்போதோ, மலைஉச்சிக்குப் போகும்போதோ அல்லது விமானத்தில் பறக்கும்போதோ சிலருக்கு காதுவலி ஏற்படுவதுண்டு.

சூயிங்கம் மெல்லும்போது காற்றை வெளியேற்றுவதால் காது வலிக்கான வாய்ப்பு குறைகிறது. சூயிங்கத்தை மெல்வதால் உமிழ்நீர் அதிகம் சுரக்கும். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உமிழ்நீர் மிகக்குறைவாக சுரக்கும். அவர்களுக்கு, உமிழ்நீர் சுரக்க சூயிங்கம் பயன்படுத்துவதுண்டு.

சுயிங்கம்

உலகளவில் இங்கிலாந்து மக்கள் சூயிங்கம் அதிகம் சாப்பிடுவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. சூயிங்கத்தை மென்றுவிட்டு பொது இடங்கள், சாலைகளில் பலரும் வீசுவதால், அவற்றை சுத்தம் செய்வதற்கு மட்டும் அந்நாட்டு அரசு ஆண்டுக்கு பல லட்சம் ரூபாயைச் செலவிடுகிறது. அந்த அளவுக்கு அங்கே சூயிங்கம் பயன்பாடு அதிகம்” என்கிறார் டாக்டர் விஷால்.

– ஆ.அ. தக்சின் பானு

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com