Doctor Vikatan: பழைய சாதமும், சாதம் ஊற வைத்த நீரும் உடம்புக்கு நல்லது என்று சமீப காலமாக அதிகளவில் பேசப்பட்டு வருகிறதே… ஆர்தரைடிஸ் உள்ளவர்கள் பழைய சாதம் சாப்பிடலாமா? அதைச் சாப்பிட காலை- பகல்- இரவு எந்த நேரம் ஏற்றது? பக்குவமாக அதை ஊறவைக்கும் முறையையும் கூறவும். பழைய சாதம் போல் நான் ஓட்ஸில் பயன்படுத்துகிறேன். சுவை அதேபோல் தான் உள்ளது. அரிசி தவிர பிற தானியங்களையும் இப்படிப் பயன்படுத்தலாமா?
– Meenakshi Mohan, விகடன் இணையத்திலிருந்து
பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்
பழைய சாதம் போன்ற சில உணவுகளில் புரோபயாடிக்ஸ் எனப்படும் குடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியா இருப்பதால் ஆரோக்கியத்துக்கு உதவுவதாக ஆய்வுகள் சொல்கின்றன. குடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதால்தான் மூட்டுவலி போன்றவை வருவதாகச் சொல்வதுண்டு. ஆனால் ஆயுர்வேதம் போன்ற சில மருத்துவப் பிரிவுகள், புளிக்கவைக்கப்பட்ட உணவுகளை இது போன்ற பிரச்னை உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது என்றும் அவை வீக்கத்தையும் வலியையும் அதிகரிக்கும் என்று சொல்கின்றன.
எனவே உங்கள் உடல்நலம் குறித்து நன்கு அறிந்தவர் என்ற வகையில் உங்கள் மருத்துவரிடம் கேட்டு இந்த விஷயத்தில் நீங்கள் முடிவெடுப்பதுதான் சரி. உங்களுக்கு பழைய சாதம் ஏற்றுக்கொள்கிறது என்கிற பட்சத்தில் சாப்பிடுவதில் தவறில்லை. அதைச் சாப்பிடுவதால் வலியும் வீக்கமும் அதிகரித்தால் சாப்பிட வேண்டாம். அது தனிப்பட்ட நபரின் உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தது.