மூளையில் கட்டி ஏற்பட்டாலே அதனால் உயிருக்கு ஆபத்து நேரலாம் என்ற கருத்து பரவலாக உள்ளது. ஆனால், மூளையில் ஏற்படும் 80% கட்டிகள் சாதாரண கட்டிகள், 20% கட்டிகள் மட்டுமே புற்றுநோய்க் கட்டிகளாக இருக்கின்றன. சாதாரண கட்டிகளை அறுவை சிகிச்சை மூலம் முழுமையாக குணப்படுத்திவிட முடியும்.
இன்றைய நவீன மருத்துவ வசதிகள் காரணமாக அறுவை சிகிச்சை மூலமோ, ஃபோக்கஸ்டு ரேடியேஷன் (Focused Radiation) சிகிச்சை மூலமாகவோ மூளையில் ஏற்படும் புற்றுநோய்க் கட்டிகளைக்கூட, 100% முழுமையாக குணப்படுத்திவிட முடியும். அதனால், மக்களுக்கு இது சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
மூளையில் கட்டி ஏற்பட்டாலே அது புற்றுநோய்க் கட்டியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல், தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக யாருக்கும் மூளைப் புற்றுநோய் வருவதில்லை. மூளைக்கட்டி ஒருவருக்கு இருந்தால் அவருக்கு தீராத தலைவலி ஏற்படும். காலையில் தூங்கி விழிக்கும்போது தலைவலி ஏற்ட்டாலோ, தொடர்ச்சியாக வாந்தி ஏற்பட்டாலோ, வலிப்பு நோய் இல்லாதவர்களுக்கு திடீரென வலிப்பு ஏற்படுவது, உடல் மரத்துப்போதல், கண் பார்வை குறைதல், கேட்கும் திறன் குறைதல் போன்றவை ஏற்பட்டாலோ மூளைக்கட்டியின் அறிகுறிகளாக இருக்கலாம்.
நீண்ட காலமாக ஒருவருக்கு தலைவலியோ, ஒற்றைத்தலை வலியோ இருந்தால் அது மூளைக்கட்டியாக இருக்க வேண்டியதில்லை. தொடர்ந்து அதிகாலையில் தலைவலியும், வாந்தியும் சேர்ந்து ஏற்படும்போது, அது மூளைக்கட்டிக்கான அறிகுறிகளாக இருக்கலாம்.