கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் தன் குழந்தைக்கும் சேர்த்து உண்ண வேண்டும் என்பது பல ஆண்டுக் காலமாகச் சொல்லப்பட்டு வரும் செய்தி. கர்ப்பகாலம் என்பது தாய்க்கு மட்டுமன்றி சேய்க்கும் முக்கியமான காலம். எனவே, கர்ப்ப நாள்களில் ஆரோக்கியமான உணவு வகைகளை உட்கொள்வது அவசியம். சளி, இருமல், மலச்சிக்கல் போன்றவை ஏற்படாமல் உடலைப் பார்த்துக்கொள்ள வேண்டும்.
கர்ப்பிணிகள் தங்கள் உடம்பில் எந்தவொரு கோளாறும் இல்லாமல் இருக்க வேண்டிய கட்டாயமும் உண்டு. பித்தம், சூடு போன்றவை அதிகம் இல்லாமல் சீராக வைத்திருப்பது, குழந்தையின் ஆரோக்கியத்துக்கும் நல்லது.
புரதச்சத்து, மாவுச்சத்து, தேவையான அளவு கொழுப்புச்சத்து நிறைந்த உணவுகள் என சமச்சீரான உணவியல் முறையைப் பின்பற்ற வேண்டும். இது, உடலில் உள்ள உபாதைகளைக் கட்டுப்படுத்துவதுடன் வயிற்றில் உள்ள சிசுவுக்கு ஊட்டத்தையும் அளிக்கும்.
ஆனால், உடல் சூட்டை சீராக வைத்துக்கொள்ள, மிளகு – மஞ்சள் பாலை தினமும் கர்ப்பிணிகள் பருகுவது கட்டாயம் என்று சொல்லப்படுவதுண்டு. பொதுவாகவே, மஞ்சளால் கிடைக்கும் நன்மைகளை நாம் அறிந்திருக்கிறோம். கொரோனா காலகட்டத்தில் மனிதர்களால் பெரிதும் பயன்படுத்தப்பட்ட பொருள் மஞ்சள்தூள். மஞ்சள்தூள் இல்லாமல் உணவு சமைக்க முடியாது. குறிப்பாக குழம்பு, கிரேவிகளில் சுவைக்கும் நிறத்துக்கும் காரணம் மஞ்சள்தூள்தான்.