தற்போதைய நிலைமையின்படி, தீக்காயமடைந்த பல நோயாளிகள் மருத்துவமனைகளில் உள்ள சிறப்பு தீக்காய பராமரிப்புப் பிரிவுகளில் சிகிச்சை பெறுவதில்லை. அதற்குப் பதிலாக பொது வார்டுகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தீக்காயங்களுக்குத் தனித்தனியாக சிகிச்சையளிப்பது நோயாளிகளிடையே மாசு மற்றும் தொற்றுநோயைத் தடுக்க உதவும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். “தீக்காயமடைந்த நோயாளிகளுக்குப் பல நிலைகளில் சிறப்பு கவனிப்பு தேவைப்படுகிறது. ஏனெனில் பாதிக்கப்பட்ட பகுதி மற்றும் தீக்காயங்களின் அளவு ஆகியவற்றின் அடிப்படையில் சேதம் மாறுபடும். தீக்காயமடைந்த நோயாளிகள் மேலும் வலி மற்றும் எரிச்சலில் இருந்து நிவாரணம் பெற குளிரூட்டப்பட்ட இடங்களில் வைக்கப்பட வேண்டும்” என்று டெல்லி AIIMS -ன் அக்ஷய் குமார் கூறினார்.
மருத்துவமனைகளில் தீக்காய சிகிச்சைக்குத் தேவையான உள்கட்டமைப்புகள் இருந்தாலும், தீவிரமான தீக்காயங்களுக்கு உள்ளான நோயாளிகளுக்கான அடிப்படை வசதிகள் பெரும்பாலும் பூர்த்தி செய்யப்படுவதில்லை. ஏனெனில் அவர்களுக்கு அறுவை சிகிச்சை நிபுணர்களால் முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை.
தீக்காய அறுவை சிகிச்சை நிபுணரான சாமானியா, “சுகாதார வசதிகளின் செயல்படாத தன்மை இந்தியாவில் ஒரு பிரச்னையாக உள்ளது. நான் ஹாங்காங்கில் செயற்கை தோல் பற்றிய மாநாட்டிற்குச் சென்றேன். ஒரு பையன் என்னிடம், என் தோலின் நிறத்தைப் பார்த்து, ‘நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?’ என்று கேட்டார். நான் இந்தியாவிலிருந்து வந்தவன் என்று சொன்னேன். அதற்கு அவர், ‘நீங்கள் இங்கே நேரத்தை வீணடிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்’ என்றார். நான் ஏன் என்று கேட்டேன். அதற்கு அவர், ‘நீங்கள் இதைப் பயன்படுத்துவது மிகவும் விலை உயர்ந்தது’ எனப் பதில் சொன்னார்’’ என சமானியா பகிர்ந்துள்ளார்.
10 சென்டிமீட்டர் அளவுள்ள செயற்கை டெர்ம்ஸ் எனப்படும் செயற்கை தோலின் விலை ரூ.80,000 என்று சாமானியா மதிப்பிடுகிறார். “நோய்த்தொற்று ஏற்பட்டால், தோல் நிராகரிக்கப்படலாம், மேலும் அதை மீண்டும் மாற்ற வேண்டியிருக்கலாம், இதற்கு மேலும் ரூ. 80,000 செலவாகும். இது பாதி கதை மட்டுமே. முதல் தோல் ஒட்டிய பிறகு மூன்று வாரங்கள் கழித்து, மீண்டும் ஒரு தோல் ஒட்டுதலை மேலே வைக்க வேண்டும், அதற்கு நோயாளி சில வாரங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும். மருந்து மற்றும் இதர செலவுகள் இல்லாமல் தனியாக மருத்துவமனையில் தங்குவதற்கு ஒரு நாள் செலவு ரூ. 5,000 அல்லது அதற்கும் அதிகமாக இருக்கும்” என்று சமானியா சுட்டிக்காட்டினார்.