சில குழந்தைகள் சிறு வயதிலேயே அபார திறமை கொண்டவர்களாக இருப்பார்கள். அது போன்ற ஒரு குழந்தைதான், மும்பையைச் சேர்ந்த சமர்த்தா.
மும்பை, மாட்டுங்கா லேபர்லேம்ப் பகுதியில் வசித்து வருபவர்கள் அர்ஜூன்- மகாலெக்ஷ்மி தம்பதி. இவர்களின் மகள் சமர்த்தா, 20 மாதங்களே ஆன குழந்தை. இவர் தனது அபார நினைவாற்றலால் மலர்கள், பழங்கள், நிறங்கள் உள்ளிட்ட பொருள்களின் பெயர்களை மிகச்சரியாக கூறி, பல விருதுகளையும், சான்றிதழ்களையும் வாங்கிக் குவித்து வருகிறார். ஒன்றரை வயதிலிருந்து தனது சாதனையை தொடர்ந்திருக்கிறார்.
மேலும், பொது அறிவுப் போட்டியில் 70 கேள்விகளுக்கு 5 நிமிடங்களில் பதிலளித்ததன் மூலம், இன்ஃப்ளூயன்சர் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்டில் ’யங் மெமரி சாம்பியன்’, யுனிவர்சல் சாதனை புத்தகம்த்தில் ’ஈர்க்கக்கூடிய சாதனை’ மற்றும் இன்ஃப்ளூயன்சர் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட், மெமரி கிட் ரெக்கார்டிலும் பதிவு பெற்றுள்ளார். யுனிவர்சல் ரெக்கார்ட்ஸ் ஃபோரம் உலக சாதனை புத்தகம் – 2023-ல் அவரது பெயர் மற்றும் புகைப்படம் இடம் பெற்றுள்ளது.
தேசிய கீதம், ஏ முதல் இசட் வரையிலான எழுத்துகள், மனித உறுப்புகள் மற்றும் உடல் உள்பாகங்களின் பெயர்கள், 10 பழங்கள், 5 காய்கறிகள், வாகனப் பெயர்கள், 14 விலங்குகளின் பெயர்கள், 2 ஆங்கிலக் கவிதைகள், 6 கட்சிப் பெயர்கள், இந்திய கரன்சி நோட்டுகள் மற்றும் நாணயங்கள் ஆகியவற்றை சொல்லி, ஏப்ரல் மாதத்தில் நடந்த போட்டியில் பங்கேற்று சாதனை படைத்தார்.
இதனை தொடர்ந்து 2023-ம் மே மாதம் நடந்த ஆன்லைன் போட்டியில் தேசியப் பறவையின் பெயர், தேசியப் பூவின் பெயருடன் தேசியப் பழம், நாட்டின் தலைநகர், நாட்டின் பிரதமர், மகாராஷ்டிராவின் அனைத்து மாவட்டங்களின் பெயர்களை கூறி சாதனை படைத்துள்ளார்.