
ஆஸ்துமாவைப் பற்றி நிறைய மூடநம்பிக்கைகள் உண்டு. இந்த நோயை முழுமையாகக் குணப்படுத்த முடியாது என்றாலும், கட்டுப்படுத்த முடியும்.

ஆஸ்துமாவில் மூன்று நிலைகள் உள்ளன…
Well Controlled Asthma: முறையாக மாத்திரைகள் சாப்பிட்டு, நுரையீரல் மற்றும் மூச்சுத்திணறல் தொந்தரவுகள் இன்றி இருக்கும் நிலை .

Partially Controlled Asthma: பருவ மாற்றங்கள் ஏற்படும்போது, தொற்று பாதிப்புகள் அதிகரித்து உடல்நலம் மோசமடையும் நிலை.

Poorly Controlled Asthma: இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் ஆஸ்துமா பிரச்னை மிக அதிகமாகத் தெரியும் நிலை. ஆஸ்துமா இருப்பவர்கள் இந்த அடிப்படைகளைத் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்

பாதிக்கப்பட்டவருக்கு எந்த மாதிரியான அறிகுறிகள் தெரிகின்றன, மூச்சுத்திணறல் தொந்தரவின் தீவிரம் எந்தளவுக்கு உள்ளது, குடும்பப் பின்னணியில் யாருக்கேனும் ஆஸ்துமா தொந்தரவு இருந்திருக்கிறதா போன்ற தகவல்கள் முதலில் பெறப்படும்.

இரவு அல்லது அதிகாலை நேரங்களிலோ, அதிகப் புகையை சுவாசிக்கும்போதோ, செல்லப்பிராணிகளுடன் விளையாடும்போதோ, அதிக மனஅழுத்தத்துக்கு உள்ளாகும்போதோ மூச்சுத்திணறல், இருமல் போன்ற அறிகுறிகள் தீவிரமாக இருந்தால் ஆஸ்துமா பாதிப்புக்கு வாய்ப்புகள் அதிகம்.

ஆஸ்துமாவைக் கட்டுக்குள் வைத்திருக்க: ஆஸ்துமா நோயாளிகளுக்கு வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். குளிர் மற்றும் வெயில் காலங்களில் வைரஸ் தொற்றுகள் வேகமாகப் பரவும். எனவே, அந்தக் காலகட்டத்தில் நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டும்.

தினமும் சரியான அளவு மருந்துகளை உட்கொள்ள வேண்டும். அதிகமாகவோ, குறைவாகவோ பயன்படுத்தக் கூடாது. குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை ஆஸ்துமா பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம்.

ஆஸ்துமா தொந்தரவு இருப்பவர்கள், தங்களுக்கு எத்தகைய சூழல் ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது என்பதைத் தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையுடன் அதைத் தவிர்க்க வேண்டும். புகைபிடிப்பதை முற்றிலும் நிறுத்திவிட வேண்டும்.

ஆஸ்துமா பாதிப்பு எந்த வயதில் வேண்டுமானாலும் யாருக்கும் ஏற்படலாம். எனவே, எத்தகைய சூழலிலும் அறிகுறிகளைத் தட்டிக்கழிக்கக் கூடாது.