குடும்பத்தையும் கவனித்துக்கொண்டு ஆன்மிகப் பணி, ரோட்டரி பணி மட்டுமின்றி எழுத்தாளர், தன்னம்பிக்கை பேச்சாளர், ஆன்மிக நிகழ்ச்சிகளை நடத்துபவர் எனப் பல்வேறு அடையாளத்தோடு ஆதரவற்றோருக்கு உணவு வழங்கி வருவதை தினசரி வேலையாகச் செய்துவரும் நெல்லை பாலுவை அவருடைய அலுவலகத்தில் சந்தித்தோம். அப்போதுதான் அன்றைக்கு விநியோகம் செய்யவேண்டிய தயிர் சாதத்தை சமையல்காரருடன் சேர்ந்து சமைத்து இறக்கி வைத்துவிட்டு வந்து நம்மிடம் பேசினார்.
“நெல்லை மாவட்டம் கோபாலசமுத்திரம்தான் சொந்த ஊர். பண்ணை வெங்கட் ராமய்யர் பள்ளி, நெல்லை ம.தி.தா பள்ளி, பத்தமடை பள்ளியிலும், பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் பி.ஏ ஆங்கிலமும், ம.தி.தா இந்துக் கல்லூரியில் எம்.ஏ தமிழ் இலக்கியமும் படித்தேன். படிக்கும் காலத்தில் பல்வேறு இலக்கியப் போட்டிகளில் கலந்துகொண்டு பல பரிசுகளைப் பெற்றேன்.
1982-ல் கல்லூரியில் படிக்கும்போது அகில இந்திய அளவிலான பேச்சுப் போட்டியில் கலந்துகொண்டு அப்போதைய குடியரசுத்தலைவரிடம் விருதும், பரிசும் பெற்றேன். அதற்காக தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர், என்னைப் பாராட்டி பெரும் தொகையைப் பரிசாகத் தந்தார்.